போட்டித் தேர்வு பயிற்சி.. கிராமப்புற மாணவர்களை தயார் செய்வதே அரசின் நோக்கம்.. அன்பில் மகேஷ்!
திருச்சி: கிராமப்புறங்களில் உள்ள ஏழை மாணவர்கள் அரசு துறைகளில் பணியாற்ற வேண்டும் என்பதற்காக பல போட்டி தேர்வுகளுக்கு தயார்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
திருச்சி அரியமங்கலம் சேஷாயி தொழில்நுட்ப பயிலரங்கத்தில் திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.

வேலைவாய்ப்பு முகாம்
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் இந்த சிறப்பு முகாமினை துறை சார்ந்த அமைச்சராக சி.வி.கணேசன் ஏற்பாடு செய்துள்ளார். இது இளைஞர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சென்னையில் ஏற்கனவே நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம் மூலம் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு பின் தற்போது இங்கு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.இந்த வேலைவாய்ப்பு முகாமில் 190 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளனர். மேலும் நில நிறுவனங்கள் வந்துகொண்டு இருக்கின்றனர். இதற்காக அமைச்சர் சிவி கணேசனுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.

போட்டித் தேர்வு
தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை சார்பாக போட்டித்தேர்விற்கு பயிற்சி அளிக்கப்படும் என்று ஏற்கனவே நாங்கள் அறிவித்திருந்தோம். கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய மாணவர்கள் அரசு துறைகளில் பணியாற்ற வேண்டும் என்பதற்காக பல போட்டி தேர்வுகளுக்கு அவர்களை தயார் செய்வதே அரசின் நோக்கம். அதேபோல் ஏழை மாணவர்கள் பலன் அடைய வேண்டும் என்கிற நோக்கில் தான் அரசு சார்பில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வை பொறுத்தவரை தேவையில்லை என்பது தான் அரசின் நிலைப்பாடு. அதற்காக தான் ஒட்டுமொத்த அரசியல் கட்சியினரும் ஒன்று சேர்ந்து சட்ட மசோதவை அனுப்பி வைத்துள்ளோம் என்று கூறினார்.

புதிய கல்விக் கொள்கை
புதிய கல்வி கொள்கை தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்று மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் திருச்சிக்கு வந்தபோது தெரிவித்திருந்தார். இது குறித்த கேள்விக்கு பதிலளித்த அன்பில் மகேஷ், ஏற்கனவே மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் காஞ்சிபுரத்திற்கு வந்தபோது இதேபோன்று கூறினார். தற்போதும் இதே போல் மீண்டும் பேசி சென்றிருக்கிறார்.

தமிழக அரசின் நிலைப்பாடு
முதலமைச்சர் முக ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்த போது நீட் மற்றும் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழகத்தின் கருத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வழங்கிய கடிதத்தை மத்திய இணை அமைச்சர் சரியாக படித்து பார்க்கவில்லை என கருதுகிறேன். மத்திய இணையமைச்சர் சரியாக படித்து பார்த்தால், அவர் கூறுவது போல் எதுவும் இல்லை என்பது தெரியும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications