கொள்ளிடத்தில் வெள்ளம்.. அடுத்தடுத்து மூழ்கும் பழைய பாலத் தூண்கள்.. திருச்சி புதிய பாலத்திற்கு ஆபத்து
திருச்சி: கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த வெள்ளத்தின் காரணமாக 20வது தூண் முழ்கும் நிலையில் இருந்தது. திடீரென பழைய பாலத்தில் 17வது தூண் இடிந்து விழுந்தது. கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உள்ள பழைய பாலத்தின் தூண்கள் அடுத்தடுத்து விழுவதால், ஸ்ரீரங்கம் தீவை இணைக்கும் புதிய பாலத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
திருச்சி புறநகரத்துடன் ஸ்ரீரங்கம் தீவை இணைக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே, திருச்சி திருவானைக்காவல் செக்போஸ்ட் அருகே கொள்ளிடம் ஆற்றில் 12.5 மீட்டர் அகலம், 792 மீட்டர் நீளத்தில் 24தூண்களுடன் 1928ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாலம் பயன்பாட்டில் இருந்து வந்தது.
இந்நிலையில் இந்த பாலம் வலுவிழந்து காணப்பட்டதால் 2007ஆம் ஆண்டு கனரக வாகனங்கள் செல்ல மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டது. இதைதொடர்ந்து 2016ம் ஆண்டில் புதிய பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. புதிய பாலம் திறக்கப்பட்டதற்கு பிறகு பழைய பாலம் நடைபயிற்சி செய்வதற்காக மட்டும் திறந்து விடப்பட்டது.
போக்குவரத்து நிறுத்தப்பட்ட பழைய பாலம், உரிய பராமரிப்பின்றி போனது. 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி கொள்ளிடத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பழைய பாலத்தின் 18, 19வது தூண்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. கடந்த, 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெய்த கனமழை மற்றும் கொள்ளிடத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால், இந்த பாலத்தை தாங்கி நின்ற 18 மற்றும் 19வது தூண்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக முக்கொம்பில் இருந்து கொள்ளிடத்தில் ஒரு லட்சம் கன அடிக்கும் மேலாக தண்ணீர் செல்கிறது. இந்நிலையில் நேற்று காலை 10.30 மணியளவில் கொள்ளிடம் பழைய பாலத்தின் 17வது தூண் இடிந்து விழுந்தது. அதிகளவில் தண்ணீர் செல்வதால் இடிந்து விழுந்த பாலம் மற்றும் தூண்கள் மூழ்கியது. கொள்ளிடம் பாலத்தில் 17வது தூண் இடிந்து விழுந்த இடத்தை அதிகாரிகள் சென்று பார்வையிட்டனர். நேற்றைய தினம் காலை உடைந்த பழைய பாலத்தின், 17வது தூண் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டது. மேலும், பழைய பாலத்தின், 20வது தூண் வெள்ளநீரில் படிப்படியாக மூழ்க தொடங்கியுள்ளது.
கொள்ளிடம் பழைய பாலம் உடைந்த இடத்தை பார்வையிட்ட திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், தற்போது கொள்ளிடம் ஆற்றில் 1.8 லட்சம் கன அடி தண்ணீர் செல்கிறது. தண்ணீர் அளவு குறைந்தவுடன் பழைய பாலத்தை இடித்து அப்புறப்படுத்தும் பணியும், அதைத்தொடர்ந்து புதிய பாலத்தை பலப்படுத்தும் பணியும் துவங்கும்" என்று தெரிவித்தார்.
ஏற்கனவே விழுந்த பழைய இரும்பு பாலத்தின் தூண்களால், அதனருகே அமைந்துள்ள புதிய பாலத்தின் அடிப்பகுதியில், 2 முதல், 12 அடி ஆழம் வரை மண் அரிப்பு ஏற்பட்டது. இதனால், புதிய பாலம் வலுவிழக்கும் நிலைக்கு வந்தது. அதையடுத்து பழைய பாலத்தை முற்றிலும் இடித்து அப்புறப்படுத்த, 3.10 கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு ஒதுக்கியது.
டெண்டர் விடப்பட்டு, பாலத்தை இடிப்பதற்கான பூமிபூஜை, கடந்த, 2022ம் ஆண்டு ஜூன் 16ம் தேதி நடைபெற்றது. இப்பணிகள் இன்னும், 6 மாத காலத்திற்குள் நிறைவடையும் என்று கூறப்பட்டது. புதிய பாலத்தை பலப்படுத்த முதற்கட்டமாக, 6.28 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. பழைய பாலம் இடிப்புப்பணி துவங்கவிருந்த நிலையில், மீண்டும் கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளம் காரணமாக ஒரு தூண் இடிந்து விழுந்துள்ளது.
இதனால் புதிய பாலத்தில் அடியில், 40 அடி ஆழத்திற்கு மண் அரிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மேலும் விரைவில் விழ இருக்கும் 20வது தூண் புதிய பாலத்திற்கு ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கிறது. எனவே போர்க்கால அடிப்படையில் பழைய பாலத்தை அப்புறப்படுத்த வேண்டும். புதிய பாலத்தை சீரமைத்து பலப்படுத்த வேண்டும் என்று திருச்சி மாநகர மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.