கழற்றி வீசப்பட்ட இந்தி எழுத்துக்கள்! கடும் எதிர்ப்புக்கு மத்தியில்.. நடந்த சம்பவம்!
திருச்சி: திருச்சி ரயில் நிலையத்தின் வரவேற்பு வளையத்தில், தமிழில் இந்தி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து தற்போது இந்த எழுத்துக்கள் கழற்றி வீசப்பட்டிருக்கின்றன.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிறுவனங்களில் இந்தி திணிப்பு என்பது சர்வ சாதாரணமான விஷயமாக மாறி வருகிறது. ரயில் நிலையங்களிலும் இந்தி திணிப்பு குறித்து விமர்சனங்கள் எழுந்தன.

என்ன நடந்தது?
குறிப்பாக, தமிழ்நாட்டின் சென்னை புறநகர் ரயில் நிலையம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் இந்தி எழுத்துக்கள் முதன்மைப்படுத்தப்பட்டிருந்தன. இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டின் மிக முக்கியமான ரயில் நிலையங்களில் ஒன்றான, திருச்சி ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் பகுதியில் உள்ள வளைவில், இந்தி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. தமிழ்நாட்டில் எல்லோருக்கும் தமிழ் தெரியும். ஆனால், தமிழில் இந்தி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தால் எப்படி வாசிக்க முடியும். அப்படியான சம்பவம்தான் திருச்சியில் நடந்தது.
'கர்தவ்ய த்வார்' என்று தமிழிலும், இந்தியிலும், ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருந்தது. இதை படித்து பார்த்த பயணிகள், அடேங்கப்பா.. இதென்ன திருச்சி ரயில் நிலையம் எழுந்து சென்று டெல்லிக்கு பக்கத்தில் உட்கார்ந்துக்கொண்டதா என்ன? என்று சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து விஷயம் அரசியல் தலைவர்களின் கவனத்திற்கு சென்றது. முதலமைச்சர் உட்பட, அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவிக்க, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வித்தியாசமான பாணியில் அறிக்கை விட்டிருந்தார்.
இப்படியே போனால் சரிப்பட்டு வராது என்று உணர்ந்த திமுகவினர், உடனடியாக போராட்டக்களத்தில் இறங்கினர். விஷயத்தின் தீவிரத்தை உணர்ந்த நிர்வாகம், வழக்கம் போல பின்வாங்கிக்கொண்டது. தற்போது இந்த இந்தி வார்த்தைகள் கழற்றி தூக்கியெறியப்பட்டிருக்கின்றன. இது தொடர்பான வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது.












Click it and Unblock the Notifications