லீஸுக்கு வீடு வேணுமா? வாடகை வீட்டுக்காரர்களா? வீட்டுக்கடன் வேணுமா? திருச்சியை திணறடித்த "கடன் செயலி"
திருச்சி: ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தானே செய்வார்கள்.. அப்படித்தான் திருச்சியிலும் சிலர் ஏமாந்து போயுள்ளனர். இதோ புதிதாக ஒரு கும்பல் சோஷியல் மீடியாவில் முளைத்து கிளம்பி உள்ளது.
வசதிகளும், தொழில்நுட்பமும் பெருக பெருக, மோசடிகளும், குற்ற செயல்களும் அதிகரித்தபடியே உள்ளன.. சோஷியல் மீடியாக்களில் இந்த மோசடிகள் அதிகமாகி கொண்டே வருகின்றன.

வங்கிகள்: வங்கிகள், பொது காப்பீட்டு நிறுவனங்கள், போஸ்ட் ஆபீஸ்களில் முதலீடு செய்யும் தொகைக்கு குறைவான வட்டி கிடைப்பதால், இதையே தங்களது மூலதனமாக்கி, மக்களை ஏமாற்றுகிறது ஒரு கூட்டம். நிதி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட்களில் முதலீடு செய்தால், ஓவர்நைட்டில் பணக்காரராகிவிடலாம் என்றெல்லாம் ஆசை வார்த்தைகளை சொல்லி, மயக்குகிறது அந்த கூட்டம். இதில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என பாகுபாடில்லாமல் சிக்கி கொள்கிறார்கள்.
திருச்சியில் மட்டும், இந்த 6 மாதங்களில் 20க்கும் மேற்பட்ட ஆன்லைன் மோசடி வழக்குகள் பதிவாகி உள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவிக்கின்றனர். பலமுறை விழிப்புணர்வு தந்தும், இன்னமும் பலர், மோசடி வலையில் விழுந்து கொண்டேயிருக்கிறார்கள். இப்போது கடன் செயலி (லோன் ஆப்) என்ற ஒன்றை புதுசாக ரிலீஸ் செய்திருக்கிறார்களாம்.
கடன் செயலிகள்: ஆண்ட்ராய்டு செல்போன்களில் ப்ளே ஸ்டோரில், இதுபோன்ற கடன் செயலிகள் நிறைய வலம்வருகின்றன.. இதனை நாம் டவுன்லோட் செய்து அப்டேட் கொடுத்தால், வாடிக்கையாளரின் ஆதார் கார்டு, பான் கார்டு போன்றவற்றை பதிவிட சொல்கிறார்கள்.. பிறகு, நம்முடன் நட்பாக பழகி, நம்முடைய காண்டாக்ட் லிஸ்ட் மொத்தத்தையும் எடுத்து விடுவார்கள்.
நாம் ரூ.5 ஆயிரம் கடன் கேட்டு அப்ளை செய்தால், அடுத்த சில நிமிடங்களில் பிடித்தம் போக ரூ.3000 ரூ.4000 நம்முடைய வங்கிக்கணக்கிற்கு அனுப்புகிறார்கள். அதற்கு பிறகு, அந்த கும்பல் ஒரு வாரத்தில் இந்த தொகைக்கான வட்டியுடன் ரூ. 5500, 6000 செலுத்த வேண்டும் என்று மிரட்டல் விடுக்கிறார்களாம்..
மார்பிங் போட்டோக்கள்: அதுமட்டுமல்ல, நாம் பதிவிடும் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டுகளில் இருக்கும், பெண்களின் போட்டோக்களை எடுத்து மார்பிங் செய்து, ஆபாசமாக சித்தரித்து, அதையும் வாட்ஸ் அப்பில் பதிவிடுகிறார்கள். முதலில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மிரட்டல் விடுப்பார்கள், பிறகு, பணம் தரவில்லையானால், வீடியோக்களை அனுப்பி விடுகிறார்கள்.. இது தொடர்பான தினமும், சைபர் கிரைம் போலீசாருக்கு நான்கைந்து புகார்கள் வருகிறதாம்.
இந்த கும்பலிடம், அவசரத்திற்கு கடன் வாங்கி கொண்டு, நிறைய இளம்பெண்கள், குடும்ப பெண்களும் சிக்கி கொண்டுள்ளார்களாம். அதனால், இதுபோன்ற புது செயலிகள் கடன் தருவதாக சொன்னதால், ரிசர்வ் வங்கி அங்கீகரித்த நிறுவனம் தானா என்பதை முதலில் நாம் உறுதிப்படுத்த வேண்டும். அதன் பிறகே, கடனுக்கு அப்ளை செய்ய வேண்டும்.
வடமாநில கும்பல்: இது போன்ற மோசடி கும்பல் பெரும்பாலும், வடமாநிலங்களில் இருந்து இயங்குகிறது. அதனால், குற்றவாளிகளை பிடிப்பது கடினமாக உள்ளது என்றும், பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக புகார் அளித்தால் வங்கிக்கணக்கை முடக்கி பணத்தை கைப்பற்றலாம் என்றும் போலீசார் அறிவுறுத்துகிறார்கள்.












Click it and Unblock the Notifications