"நான் இந்தியன் இல்லை.. இந்தி மொழிக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை" கோர்ட் வாசலில் சீமான் தடாலடி!
திருச்சி: தான் இந்தியன் இல்லை என்றும், இந்தி மொழிக்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை எனவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி மொழியை பயன்படுத்த வேண்டும், இந்தியை நாம் பாதுகாக்க வேண்டும் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அமித் ஷாவின் கருத்துக்கு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டன.
இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக ஏராளமான அரசியல் கட்சித் தலைவர்களும் பதிலடி கொடுத்தனர். இந்த நிலையில் அமித் ஷா கருத்துக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் கொடுத்துள்ளார்.
பெங்களூர் சம்பவம்! அடுத்த 3 நாட்கள் முக்கியம்! நேரில் வாங்க.. எடப்பாடிக்கு
திருச்சியில் சீமான்
2018ம் ஆண்டு திருச்சி விமான நிலையத்தில் மதிமுக - நாம் தமிழர் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதலில், பொதுச்சொத்தை சேதப்படுத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சீமான் இன்று ஆஜரானார்.
இந்தி மொழி பற்றி சீமான்
அப்போது செய்தியாளர்களை சந்தித்து சீமான் கூறுகையில், பாஜக என்ற கட்சியின் முக்கிய நோக்கமே ஹிந்தி சமஸ்கிருதத்தை திணிப்பதுதான். மூன்று முதல் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு வரை தாய்மொழிக்கல்வி படித்தால் போதும் என்று சொல்வது தமிழ் மொழிக்கு சரிபடாது. தமிழ் மொழி என்பது ஒரு கடல். முதுகலை ஆய்வு மாணவர்களே, சில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாமல் பொழிப்புரையை தேடுகின்றனர். அதேபோல் புதிய கல்விக் கொள்கை என்பது குழந்தைகளுக்கு ஒரு மரண சாசனம் என அறிஞர்கள் கூறி வருகின்றனர் என்று குற்றம்சாட்டினார்.
தமிழிசை மீது விமர்சனம்
தொடர்ந்து புதிய கல்விக் கொள்கையை பல கல்வியாளர்கள், ஆசிரியர்களை கொண்டு ஆலோசித்த பிறகு கொண்டு வந்ததாக தமிழிசை சௌந்தரராஜனின் கருத்து பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு, மூத்த தலைவர் குமரி அனந்தன், தமிழிசை என்று அவருக்கு அந்த பெயரை வைத்து வீணடித்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். மாணவர்களை எல்லாவற்றுக்கும் தேர்வு எழுதச் சொல்லும் ஆட்சியாளர்கள், முதலமைச்சர்கள், அமைச்சர்கள் ஏன் தேர்வு எழுதுவதில்லை என கேள்வி எழுப்பினார்.
நான் இந்தியனே இல்லை
தொடர்ந்து, ஆ.ராசா எப்போது இந்து மதம் பற்றி தவறாக பேசினார். மனுதர்மத்தில் எழுதி இருப்பதை தான் ஆ.ராசா எடுத்து சொல்கிறார். புதியக் கல்விக் கொள்கையே மனுதர்மத்தின் அடிப்படையில் தான் கொண்டு வரப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாம் தமிழர் கட்சி எப்போதும் தயாராகவே உள்ளது. இவ்வாறு சீமான் தெரிவித்தார்.
"இந்தியை பாதுகாக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளாரே .." என்ற நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த சீமான், முதலில் நான் இந்தியனே இல்லை, எனக்கும் அந்த மொழிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்தார்.