“புத்தியை தெளிய வைக்கனும்”.. எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக்கை மறைமுகமாக சாடிய ஜவாஹிருல்லா
திருச்சி: எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்கை விமர்சிக்கும் வகையில் மமக தலைவர் ஜவாஹிருல்லா அதிமுக கூட்டணி தொடர்பாக காட்டமான விமர்சனத்தை முன்வைத்து இருக்கிறார்.
திருச்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பாக பாஜகவை தோற்கடிப்போம் 'இந்தியா'வை ஆதரிப்போம் என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது. இதில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர். குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திமுக மூத்த தலைவர் டிகேஎஸ் இளங்கோவன், காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமி, மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

இந்த கூட்டத்தில் பேசிய ஜவாஹிருல்லா, "மதச்சார்பின்மையை எப்படி அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமியால் பாதுகாக்க முடியும். பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் இடையே கள்ள உறவு நீடிக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி, மதச்சார்பின்மையை வெல்லக்கூடியவர் என பேசுபவர்களின் புத்தியை நாம்தான் தெளிய வைக்க வேண்டும். நரேந்திர மோடியின் கைகளை, தன்னோடு கோர்த்து கொண்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி எப்படி மதச்சார்பின்மைக்கு ஆதரவானவராயிருக்க முடியும்? என்று கேள்வி எழுப்பினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மதுரையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் வெல்லட்டும் மதசார்பின்மை என்ற பெயரில் மாநாடு நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அதிமுக முன்னாள் அமைச்சர்களும் இதில் பங்கேற்றனர். எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் பைசி, மாநில தலைவர் நெல்லை முபாரக், தேசிய செயற்குழு உறுப்பினரும் முன்னாள் மாநில தலைவருமான தெஹ்லான் பாகவி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
அந்த கூட்டத்தில் பேசிய எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக், "புரட்சி தலைவர் எம்ஜிஆர் சொன்னது போல நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் இப்படை தோற்பினும் எப்படை வெல்லும். சிறுபான்மை மக்களுடைய வாக்கை கொத்தாக வாங்கி செல்லலாம் என்று நினைத்த அரசியல் கட்சிகளுக்கு பேரடியாக வீழ்ந்தது வெல்லட்டும் மதசார்பின்மை மாநாடு. இப்படி ஒரு மாநாடு இனி இந்திய வரலாற்றில் நடக்காது என நிரூபித்திவிட்டோம். சிறுபான்மை மக்களுக்கு நீங்கள் செய்த நலனை பொதுவெளியில் விவாதிக்க முதலமைச்சர் தயாரா?
அரசியலமைப்பு சட்டத்திலிருந்து மதச்சார்பின்மையை நீக்குவதற்கு ஒன்றிய அரசு முயற்சித்து வருகிறது. பாஜக கூட்டணியிலிருந்து விலகி தமிழ்நாட்டின் அரசியல் சூழலையே மாற்றிக் காட்டியவர் எடப்பாடி பழனிசாமி. மக்களின் விருப்பத்தை எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றிக் காட்டியுள்ளார். திமுகவின் இரண்டரை ஆண்டுகால ஆட்சியில் முஸ்லிம்களுக்காக சிறு துரும்பை கூட கிள்ளி போடவில்லை. மக்களை ஏமாற்றி திமுக ஆட்சிக்கு வந்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக அக்கட்சியின் பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்படும். இஸ்லாமியர்களுக்காக எடப்பாடிக்குப் பழனிச்சாமி போல யாரும் குரல் கொடுக்கவில்லை." என்று கூறினார். இந்த நிலையில் ஜவாஹிருல்லா திருச்சியில் ஆற்றிய உரை என்பது மறைமுகமாக எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக்கை விமர்சிக்கும் வகையில் அமைந்து உள்ளது.












Click it and Unblock the Notifications