ஜெ., மரணம் தொடர்பாக.. முதலில் ஸ்டாலினை விசாரிக்க வேண்டும்… டிடிவி தினகரன் சொல்கிறார்
திருச்சி: ஆறுமுகசாமி ஆணையம் அமைப்பதற்கு காரணமே மு.க. ஸ்டாலின் தான் என்று அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் டோல்கேட் ரவுண்டானா பகுதியில் அமமுக வேட்பாளர் ராஜசேகருக்கு ஆதரவாக டிடிவி தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் மோடியும் சேர்ந்து தமிழகத்தை வஞ்சித்து விட்டதாக கூறினார்.
சசிகலாவுக்கு துரோகம் செய்த ஈபிஎஸ், ஓபிஎஸ் தற்போது கூட்டணி வைத்ததன் மூலம் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்து விட்டார்கள் என்றும் குற்றஞ்சாட்டினார்.

பயப்பட மாட்டோம்
தமிழகத்தில் மோடி மட்டுமல்ல, அவரது டாடியே வந்தாலும் பயப்பட மாட்டோம் என்றும், காவிரி பிரச்சனையை கூட காங்கிரஸால் தீர்த்து வைக்க முடியவில்லை எனவும் விமர்சனம் செய்தார்.

ஸ்டாலினை விசாரியுங்கள்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், விசாரணை கமிஷன் அமைக்க வலியுறுத்துவதாக ஸ்டாலின் பிரச்சாரத்தில் கூறினார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய டிடிவி தினகரன், முதலில் விசாரிக்கப்பட வேண்டியது ஸ்டாலினை தான் என்றார்.

ஸ்டாலின் பற்றி விமர்சனம்
காங்கிரஸ் கூட்டணி அமைவதற்கு முன்பு மு.க.ஸ்டாலின் பா.ஜ.க-வுடன் கூட்டணி பேசினார் என்று கூறிய டி.டி.வி.தினகரன், இந்து மதத்தைப் பற்றி கண்டபடி பேசிவிட்டு, இப்போது திடீரென நான் இந்து மதத்துக்கு எதிரி இல்லை என ஸ்டாலின் பேசுவதாக கூறினார். அரசியலுக்கு மத சாதி துவேஷங்கள் தேவையில்லை எனவும் பேசினார்.

மக்கள் முடிவு செய்வார்கள்
நடக்க உள்ள 18 தொகுதி இடைத்தேர்தலுக்குப் பின் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என்று நம்பிக்கை தெரிவித்த டிடிவி தினகரன், நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியின் மூலம் தமிழகத்தின் நலன் காக்கும், பிரதமரை தமிழக மக்கள் முடிவு செய்வார்கள் என்றார்.

1-2 தொகுதிகள்
இதற்கிடையே, தமிழகம், புதுச்சேரியில் 40 மக்களவை தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? என பண்பாட்டு மக்கள் தொடர்பகம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு ஒன்று அல்லது இரண்டு இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்தை எதிர்த்துப் போட்டியிடும் அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தேனி தொகுதியை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications