2024 நாடாளுமன்றத் தேர்தல்! டெல்லி செல்கிறாரா அமைச்சர் கே.என்.நேரு மகன்! பரபரக்கும் பெரம்பலூர்!
திருச்சி: திமுக முதன்மைச் செயலாளரும், மூத்த அமைச்சருமான கே.என்.நேருவின் மகன் அருண் நேரு, வரும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அருண் நேருவை அரசியலுக்கு முழுமையாக இழுத்து வருவதற்கான பணிகளை அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமல்ல அருண் நேருவை எம்.பியாக்கி டெல்லிக்கு அனுப்பி வைக்கவும் அவர்கள் தான் ஆசைப்படுகின்றனர்,

தமிழக அமைச்சரவையில் மூத்த அமைச்சர்களில் ஒருவரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு, திருச்சியில் இல்லாத நாட்களில் கட்சியினர் இல்ல நல்லது கெட்டதுகளில் பங்கேற்று வருகிறார் அவரது மகன் அருண் நேரு. திமுகவில் எந்தப் பொறுப்பிலும் இல்லாத அருண் நேருவை, அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் கட்சி போஸ்டர்களிலும், சுவரொட்டிகளிலும் முன்னிலைப்படுத்தி வருகின்றனர்.
வரும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அருண் நேருவை களமிறக்க வேண்டும் என இப்போதே அமைச்சர் கே.என்.நேருவிடம் ஆதரவாளர்கள் கடந்த பல மாதங்களாக நச்சரித்து வருகின்றனர். ஆதரவாளர்களின் அன்புத் தொல்லையால், நேருவும் தனது மகனை தேர்தலில் களமிறக்குவது பற்றி யோசிக்க ஆரம்பித்திருப்பதாக தெரிகிறது.
அருண் நேருவை பொறுத்தவரை சென்னையில் கட்டுமானத் தொழில் உட்பட இன்னும் பல தொழில் நிறுவனங்களை கவனித்து வருகிறார். இருப்பினும் சென்னையை காட்டிலும் இப்போது அதிகம் திருச்சியில் தங்குகிறார். இதற்கு காரணம் இல்லாமல் இல்லை என்கிறார்கள் நேருவுக்கு நெருக்கமான அபிமானிகள்.
பெரம்பலூர் தொகுதியை பொறுத்தவரை அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் போட்டியிட ஆசைப்பட்ட நிலையில், கடைசிவரை அந்த ஆசை நிறைவேறவில்லை. இதனால் தனது தம்பி போட்டியிட விரும்பிய தொகுதியில் அமைச்சர் நேரு நிச்சயம் மகனை போட்டியிட வைப்பார் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications