கூட்டணியில் உரிய அங்கீகாரம் கிடைக்காவிட்டால்... தனித்து போட்டி... மஜ்லிஸ் கட்சி முடிவு..!
திருச்சி: தமிழகத்தில் மதச்சார்பற்ற கூட்டணியில் உரிய அங்கீகாரம் கிடைக்காவிட்டால், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை அடையாளம் கண்டு தனித்து போட்டியிடுவது என அகில இந்திய மஜ்லிஸ் கட்சி முடிவெடுத்துள்ளது.
பீகாரில் ஆர்.ஜே.டி.-காங்கிரஸ் கூட்டணி அரியணை ஏறும் வாய்ப்பு நூலிழையில் தவறியதற்கு காரணம் அசாதுத்தீன் ஒவைசியின் மஜ்லிஸ் கட்சி. இந்நிலையில் வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அந்தக் கட்சியின் கணக்கை இங்கு தொடங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர் அக்கட்சியினர்.
இந்நிலையில் அசாதுத்தீன் ஒவைசி வரும் ஜனவரி மாதம் தமிழகம் வருவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் திருச்சியில் அக்கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் மாநிலத் தலைவர் இக்பால் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
அதில், குடியுரிமை திருத்த மசோதவை எதிர்த்து போராட்டங்கள் நடத்தியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், விவசாயிகள் போராட்டத்திற்க்கு ஆதரவு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிவாரணம், மத்திய அரசுக்கு கண்டனம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஜே.பி.நட்டா கொரோனாவிலிருந்து குணம் பெற வேண்டும்... பிரார்த்தனை செய்வதாக மம்தா பானர்ஜி டிவிட்..!
அதில் முக்கியமானது என பார்த்தால், மதச்சார்பற்ற கூட்டணியில் உரிய அங்கீகாரம் கிடைக்காவிட்டால், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை அடையாளம் கண்டு தனித்து போட்டியிடுவது என்பது தான். பீகாரில் 5 தொகுதிகளில் வென்றதால் இங்கேயும் வென்றுவிடலாம் எனக் கருதுகின்றனர் மஜ்லிஸ் கட்சியினர்.