தொண்டனோடு தொண்டனாக 163 கிமீ.. தமிழகத்தை அதிர வைக்கும் வைகோ நடைப்பயணம்.. Exclusive தகவல்கள்
திருச்சி: சமூக நல்லிணக்கத்தை எடுத்துரைக்கும் விதமாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ! இப்போது திருச்சியில் தொடங்கி மதுரை வரை நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதில் மதிமுக தொண்டர்கள் எழுச்சியுடன் கலந்து கொண்டு வரும் நிலையில், இந்த நடைப்பயணம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
6 கிலோமீட்டர் முழக்கம்:
அதன்படி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சமூக நல்லிணக்கத்தை எடுத்துரைக்கும் விதமாக நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 2ஆம் தேதி திருச்சியில் தொடங்கி மதுரை நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டு வரும் வைகோவுடன் முதல் 2 நாட்கள் முழுமையாக நடந்து சென்று துரை வைகோ எம்.பி, 6 கிமீ தூரத்துக்கு இடைவிடாமல் தொண்டை தண்ணீர் வற்றச் சமத்துவம் குறித்து முழக்கங்கள் எழுப்பியவாறே சென்றார்.

அப்பாவுக்கு முக்கியத்துவம்
சமத்துவ நடைப்பயணத்தில் 2 நாட்கள் மட்டும் கலந்துகொண்ட துரை வைகோ எம்.பி., அதன் பிறகு பயண ரூட் மற்றும் தொண்டர்களுக்கு உணவு, தங்குமிடங்கள் குறித்த விவகாரங்களை மட்டும் கவனித்துக் கொள்கிறார். நடைப்பயணத்துக்கான முழு கிரெடிட்டும் தனது தந்தைக்குச் சென்று சேர வேண்டும் என்ற எண்ணத்தில், தனது மீது வெளிச்சம் வேண்டாம் என்ற காரணத்தால் தவிர்த்துக்கொண்டார் என்று கூறப்படுகிறது.
தினசரி நாளிதழ்
நாளொன்றுக்கு 12 கிமீ வரை நடைப்பயணம் மேற்கொள்ளும் வைகோ, கொஞ்சம் கூட சோர்வடையாமல் தொண்டர்களோடு தொண்டராகப் புதிய புத்துணர்வுடன் காணப்படுகிறார். என்ன தான் பனிப் பொழிவு இருந்தாலும் அதிகாலையிலேயே எழுந்து அன்றைய தினசரி நாளிதழ்களைப் படித்துவிட்டுத் தான் நடைப்பயணத்தையே தொடங்குகிறார்.

தினமும் விசாரிக்கும் துரை
மதிமுக நிர்வாகிகள் ஜீவன், மணவை தமிழ் மாணிக்கம், டாக்டர் ரொஹையா ஷேக், போன்றோருடன் தினமும் பேசும் துரை வைகோ, நடைப்பயணத்தில் பங்கேற்றிருக்கும் தொண்டர்களுக்கு வழங்கப்படும் உணவு, தங்குமிடம் குறித்துக் கேட்டறிந்து கொள்வதோடு ஆலோசனைகளையும் வழங்கி விடுகிறாராம்.
சமத்துவ நடைப்பயணத்தில் பங்கேற்றிருக்கும் வைகோவுக்கு கட்சி நிர்வாகிகள் இல்லத்திலிருந்து சைவ உணவு கொண்டு வரப்பட்டுப் பரிமாறப்படுகிறது. தொண்டர்களுக்கு அசைவ விருந்து அளிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்குச் சில மாதங்களே இருக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். ஒரு பக்கம் தேர்தல் பிரச்சாரம் இன்னொரு பக்கம் மக்களைச் சந்திக்கும் பணிகள் என்றே அனைத்து அரசியல் கட்சிகளும் செயல்பட்டு வருகிறது. அதன்படியே வைகோ இந்த நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார்!
சிறப்புத் தகவல் -மு.அர்ஷத் கான்












Click it and Unblock the Notifications