குலக் கல்வியை திணிக்க பார்க்கிறார்கள்.. ஏற்க மாட்டோம்.. மத்திய அரசுக்கு எதிராக அன்பில் மகேஷ் ஆவேசம்
திருச்சி: மத்திய அரசு குலக் கல்வி முறையை திணிக்க பார்க்கிறது என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக, நாடு முழுவதும் அந்தந்த மாநிலக் கல்வித்துறைச் செயலாளர்களுடன் மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று கலந்தாலோசனை நடத்திய நிலையில், அதை தமிழக அரசு புறக்கணித்தது.
தமிழகம் ஏன் புறக்கணித்தது என்பது குறித்து, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சியில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார்.

இ-மெயில் அழைப்பு
மத்திய அரசிடமிருந்து கடந்த 2 நாட்களுக்கு தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறைக்கு மின் அஞ்சல் வந்ததாகவும், இப்போதைய கொரோனா காலத்தில் மாணவர்களுக்குக் கல்வி வழங்குவதை எப்படி செயல்படுத்துவது, புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் விவகாரத்தில் தற்போதைய நிலை பற்றியும், ஆன்லைன் கல்வியை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது பற்றியும், மே 17ம் தேதி நடைபெறும் கலந்தாலோசனைக் கூட்டத்தில் அந்தந்தத் துறை அதிகாரிகள் கலந்துகொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

கூட்டாட்சி தத்துவம்
இதுகுறித்து, முதல்வர் ஸ்டாலினின் கவனத்துக்குக் கொண்டுசென்றபோது, தமிழகத்தில் புதிய அரசு அமைந்து, பள்ளிக் கல்வித் துறைக்கென மாநில அமைச்சர் உள்ளார். ஆனால், அதிகாரிகள் மட்டும் கலந்துகொள்ள வேண்டும் என்று கூறுவது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானதாக உள்ளது என்று கூறினார்.

பதிலே தரவில்லை
மாணவர்களின் எதிர்காலம் தொடர்புடைய விவகாரத்தில் மத்திய அரசு நடத்தும் கலந்தாலோசனைக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பங்கேற்பதுதான் சரியாக இருக்கும். அவர்கள் கருத்துக்கள் கேட்கப்பட வேண்டும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். எனவே, அமைச்சரின் கருத்துகளைக் கேட்டு, அதைப் பரிசீலிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து மின்னஞ்சல் அனுப்பினோம். ஆனால் அதற்கு பதில் வரவில்லை.

குலக் கல்வி
புதிய கல்வி கொள்கை பாதகமானது. குலக்கல்வித் திட்டத்தை நினைவுபடுத்துகிறது. குலக் கல்வியை திணிக்க விடமாட்டோம். மாணவர் நலனே முக்கியம். மோதல் போக்குடன் இல்லாமல் மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படத்தான் நாங்கள் விரும்புகிறோம்.












Click it and Unblock the Notifications