"என் மாநிலம் தமிழ்நாடு; என் தாய் மொழி தமிழ்" ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்துக்கு தமிழிசை சொன்ன பதில்!
திருச்சி: ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டை தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், நான் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் என்றும், தமிழ் என் தாய் மொழி என்று பதில் கூறியுள்ளார். அதேபோல் தமிழ்நாட்டில் சிலர் பிரிவினைவாத கருத்துகள் பேசுவதால், ஆளுநர் ஆர்.என்.ரவியின் உட்கருத்தை புரிந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், தமிழகத்தில் துரதிர்ஷ்டவசமாக பின்னோக்கி இழுக்கும் அரசியல் நடைபெறுகிறது. இந்த தேசம் முழுமைக்குமாக எதை முன்னெடுத்தாலும் அதற்கு தமிழ்நாடு மட்டும் மறுப்பு தெரிவிக்கும். இது வாடிக்கையாகிவிட்டது.
இவ்வாறாக நிறைய தவறான, மோசமாக கட்டுக்கதைகளை உருவாக்கியுள்ளனர். இவற்றை உடைக்க வேண்டும். உண்மை மேலோங்க வேண்டும். தமிழ்நாடு என்பது இந்தியாவின் ஆன்மா. இந்தியாவின் அடையாளம். சொல்லப்போனால் தமிழ்நாடு என்பதை விடவும் தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும் என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்து பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிப்பதில்லை.. இதுதான் ஸ்டாலினின் மதசார்பற்ற நிலையா.. தமிழிசை ஆதங்கம்!
தமிழிசை செளந்தரராஜன் பேட்டி
இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் சமூக வலைதளங்களில் தமிழ்நாடு ஹேஷ்டாக்கை பதிவிட்டை மக்கள் ஏராளமான கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் திருச்சியில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் ஆளுநர் கருத்து குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ள உட்பொருளை புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் பிரிவினைவாத கருத்துகள் வர தொடங்கியுள்ள நேரத்தில், இந்த கருத்தை ஆர்.என்.ரவி பேசி இருக்கிறார்.
தனி நாடு
இந்தியாவை தன் நாடு என்று அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும். தமிழ்நாட்டை, தனி நாடு என்ற தோற்றத்தில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற அர்த்தத்தில் சொல்லி இருக்கிறார் என்று எடுத்துக் கொள்கிறேன். அண்மை காலமாக சில அரசியல் கட்சித் தலைவர்கள், இயக்கங்களின் தலைவர்கள் பிரிவினை பேசுவது அதிகமாகி வருகிறது. அதனால் தமிழ்நாடு, தன் நாட்டின் தன் நாடாக இருக்க வேண்டும் என்பதாகவே பார்க்கிறேன்.
தமிழ்நாடு
அதேபோல் நான் தமிழ்நாட்டைச் சார்ந்தவள், எனது மொழி தமிழ், எனது மாநிலம் தமிழ்நாடு, எனது தேசம் இந்தியா. இந்த எண்ணம் இல்லாமல், எந்தவிதத்திலும் துண்டாடப்பட்டுவிடக் கூடாது. அதேபோல் துண்டாடப்படுவது கொண்டாடப்பட்டுவிடக் கூடாது. நாம் அனைவரும் இணைந்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார். நாம் அனைவரும் இந்தியாவின் ஒரு அங்கம் தான் என்று தெரிவித்துள்ளார்.
பிரிவினைவாதம்
தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என்.ரவி சில விஷயங்களை பார்க்கிறார். அதுகுறித்து கருத்து சொல்கிறார். ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ள கருத்தின் உள் அர்த்தம் என்பது, தனி பிரிவான எண்னம் வந்துவிட கூடாது. ஏனென்றால் சிலர் தனி நாடு என்று பேசி வருகிறார்கள். அது மக்களுக்கு வந்துவிடக் கூடாது என்று தெரிவித்தார்.
மதவாதம் பற்றி கருத்து
தொடர்ந்து தமிழக பாஜகவில் நிகழ்ந்து வரும் விவகாரங்கள் குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்தார். தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதத்தை எதிர்க்கவில்லை, மதவாதத்தை எதிர்க்கிறோம் கூறியுள்ளார். ஆனால் மதத்தை வாதப்பொருளாக மாற்றியது யார் என்பதை சிந்திக்க வேண்டும் என்று தெரிவித்தார்.