எவ்வளவு துணிச்சல்! இலங்கை டூ சென்னை.. திருச்சி அரசு பஸ்சில் சிக்கிய 9 கிலோ தங்கம்.. ஷாக் பின்னணி
திருச்சி: திருச்சி அருகே சென்று கொண்டிருந்த அரசு பஸ்சில் திடீரென மத்திய வருவாய் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.5.89 கோடி மதிப்பிலான 9 கிலோ தங்க கட்டிகள் சிக்கியது. இதுதொடர்பாக தம்பதி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பின்னணியில் உள்ள திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக தங்கம், கஞ்சா, கடல் அட்டைகள், பீடி இலைகள் உள்பட பல்வேறு பொருட்களை கடத்தி செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.

அதேபோல் இலங்கையில் இருந்தும் தமிழகத்துக்கு பல பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது. இந்த கடத்தல்களை தடுக்க கடலோர பாதுகாப்பு படை போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும் கூட போலீசாருக்கு தெரியாமல் சில நேரங்களில் கடத்தல் சம்பவங்கள் நடந்து விடுகின்றன. அந்த வகையில் கடந்த 23ம் தேதி இலங்கையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடற்கரை வழியாக தம்பதி தங்கத்தை கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த தங்கத்தை அரசு பஸ்சில் சென்னைக்குக் கொண்டு செல்ல அவர்கள் திட்டமிட்ட தகவலும் கிடைத்தது.
அதாவது தம்பதி உள்பட 3 பேர் இந்த கடத்தலில் ஈடுபட்டு இருப்பதும் விரிவான விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மத்திய வருவாய் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் தீவிரமாக விசாரணையை தொடங்கினர். அதன்படி இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கம் அரசு பஸ்சில் சென்னைக்கு கொண்டு செல்வதை அதிகாரிகள் கண்டறிந்தது.
இதையடுத்து திருச்சி அருகே கல்பாளையம் கிராமத்தில் மத்திய வருவாய் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் அரசு பஸ்சில் சோதனையிட்டனர். அப்போது அந்த பஸ்சில் தங்கம் கடத்தும் கும்பலை சேர்ந்த தம்பதி உள்பட 3 பேர் இருப்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் வைத்திருந்த பையில் 9 கிலோ 765 கிராம் எடை கொண்ட தங்க பிஸ்கட்டுகள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.5 கோடியே 89 லட்சத்து 55 ஆயிரம் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த ரூ.6 லட்சம் ரொக்கம், 3 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.தம்பதி உள்பட 3 பேரையும் அதிகாரிகள் கைது செய்தனர். இந்த தங்கம் கடத்தலில் கைதான 3 பேர் மட்டுமின்றி திருச்சியைச் சோ்ந்த சிலருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களையும் கைது செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications