மீண்டும் பயம் காட்டும் கொரோனா.. தமிழகத்தின் நிலை எப்படி இருக்கிறது? ஓபனாக சொன்ன மா.சுப்பிரமணியன்!
திருச்சி: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் பெரிய அளவில் இல்லை என்றும், வைரஸின் மரபணு மாற்றங்களை கண்காணித்து வருவதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் இருந்து வருகிறது. சீனா, பிரேசில், ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளில் மேலும் தீவிரம் காட்டுமாறு மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.

மத்திய அரசு அறிவுறுத்தல்
கொரோனா பாதித்தவர்களின் ரத்த மாதிரிகளை மாநிலங்கள் மரபணு ஆய்வகத்திற்கு தினசரி அனுப்ப வேண்டும் என அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதி உள்ளார். இதனால் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மா.சுப்பிரமணியன் பேட்டி
இந்த நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், மரபணு மாற்றங்களை உடனுக்குடன் கண்காணிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. எந்த மாதிரியான வைரஸ் பரவுகிறது என்பதை அறிவதற்கான கட்டமைப்புகள் தமிழ்நாட்டில் இருக்கிறது.

கண்காணிப்பு
தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். வெளிநாடுகளில் ஓமைக்ரான் வகை வைரஸ் பரவி வருவதாக தகவல் வந்துள்ளன. ஆனால் தமிழகத்தில் ஒற்றை இலக்கத்திலேயே மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எந்த பகுதிகளிலும் அதிகளவில் பாதிப்பு இருந்தால், அந்த பகுதிகளிலேயே ஆய்வு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

அரிய வகை நோய்
தொடர்ந்து சீர்காழியை சேர்ந்த மாணவி அபிநயாவின் அரியவகை நோய் பாதிப்பு குறித்த கேள்விக்கு, சிஸ்டமிக் லூப்பர்ஸ் எதிரிமாடோஸல் என்ற நோயால் அபிநயா பாதிக்கப்பட்டுள்ளார். இது தோல் அழி நோய் என்று சொல்லப்படுகிறது. அவரின் இரு கால்களும் கறுத்து போய் பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளார். ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம், இரு கால்களையும் எடுக்க வேண்டும் என்றும், அப்படி செய்தால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.

தமிழக அரசு நடவடிக்கை
இந்த செய்தி சமூக வலைதளம் மூலம் பரவியது. மாணவியின் உயிரை காப்பாற்றிட முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தொடர்ந்து ஓமந்தூரர் மருத்துவமனையில் மாணவி அபிநயா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நிச்சயமாக கால் அழுகல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமியை காப்பாற்றிட உரிய சிகிச்சை அளிக்கப்படும் என்று உறுதியளித்தார்.












Click it and Unblock the Notifications