இது தான் விஜயகாந்த் சேர்த்துவைத்த சொத்து.. தேடி வந்த இலங்கை எம்பி.. நெகிழ்ந்த விஜய பிரபாகரன்
Recommended Video
திருச்சி: இலங்கை தமிழர்கள் மீது அதிக பாசம் கொண்டவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த். அவர்களுக்காக பல விஷயங்களை சத்தம் இல்லாமல் செய்துள்ளார். இதனால் இலங்கையில் உள்ள தமிழர்கள் மத்தியில் அவருக்கு மதிப்பும் மரியாதையும் மிகவும் அதிகம். அங்குள்ள பலர் விஜயகாந்தின் தீவிர ரசிகர்களாக இன்றும் உள்ளார்கள். இந்நிலையில் இலங்கையை சேர்ந்த எம்பி, தான் தங்கியிருந்த ஹோட்டலில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனும் தங்கியிருப்பதை கேள்வி பட்டு நேரில் சென்று சந்தித்து விஜயகாந்த் குறித்து நலம் விசாரித்தார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நடிகராக இருந்த காலம் முதலே எத்தனையோ பேருக்கு உதவிகளை அள்ளி அள்ளி கொடுத்தவர். அவரது உதவியால் சினிமாவில் இன்று பலர் உச்ச நட்சத்திரங்களாக ஜொலித்தும் வருகிறார்கள். அவருக்கு அரசியலில் மாற்றதை ஏற்படுத்த வேண்டும் என்ற தீராத ஆசை அவர் நடித்து புகழ் பெற்ற காலத்திலேயே இருந்தது.
இதன் விளைவாக அவர் கடந்த 2005ம் ஆண்டு வாக்கில் தேமுதிகவை தொடங்கினார். அரசியலில் புகழ் பெற்றார். அதிமுக மற்றும திமுகவுக்கு அடுத்ததாக பெரிய சக்தியாக விஜயகாந்த் உருவானார். ஆனால் 2011ம்ஆண்டு ஜெயலலிதாவுடன் சட்டமன்றத்தில் நேருக்கு நேர் சண்டை போட்டு பிரிந்து சென்றவர் அதன்பிறகு அரசியலில் பெரிய அளவில் எழவே இல்லை. அதற்கு காரணமாக அவரது மனைவி பிரேமலதாவையும் அவரது மைத்துனர் சுதீசையும் விஜயகாந்தின் ரசிகர்கள் இன்றும் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
சோகமான ரசிகர்கள்
இப்போது விஜயகாந்த் உடல் நிலை சரியல்லாமல் சிகிச்சை பெற்று ஓய்வு எடுத்து வருகிறார். இந்நிலையில அவரது சொத்துக்கள் வெறும் 5 கோடி கடன் பாக்கிக்காக 100கோடி சொத்துக்களை ஏலம் விடப்போவதாக இந்தியன் ஓவர்சீங் வங்கி நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிட்டு விஜயகாந்த் ரசிகர்களை மேலும் சோகத்துக்கு உள்ளாக்கியது.
இலங்கை எம்பி செய்யித் அலி
இந்த சூழலில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. திருச்சியில் தேமுதிக நிர்வாகி இல்ல காதணி விழாவில் பங்கேற்பதற்காக விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் எஸ்.ஆர் விடுதியில் தங்கியிருந்தார். அதே எஸ்.ஆர்.எம். விடுதியில் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மட்டக்களப்பு எம்பியும், முன்னாள் ராஜாங்க அமைச்சருமான செய்யித் அலி ஸாஹிர் தங்கியிருந்தார்.
விஜயகாந்த் நலம்
அவர், விஜயகாந்த் மகன் இந்த ஓட்டலில் தங்கியிருப்பதை கேள்விபட்டு தேடிச்சென்று விஜய பிரபாகரனை சந்தித்தார். அப்போது விஜயகாந்தின் உடல் நலம் குறித்து செய்யித் அலி கேட்டறிந்தார். மேலும் புதிதாக அரசியலில் நுழைந்து இருக்கும் விஜயபிரபாகரனுக்கு தனது வாழ்த்தினை தெரிவித்தார். விஜயகாந்திற்கு இலங்கையில் அதிக ரசிகர்களும் நலம்விரும்பிகளும் இருப்பதால் அங்கு வருமாறு அழைப்பும் விடுத்தார். இதனை கண்டு விஜய் பிரபாகரன் நெகிழ்ச்சி அடைந்தார்.
தேடிவரும் அன்புகள்
முன்னதாக தேர்தலுக்கு முன்பு திமுக தலைவர் ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பலரும் விஜயகாந்த்தை தேடி சென்று நலம் விசாரித்தார்கள். விஜயகாந்த் சேர்த்து வைத்த சொத்து என்றால் அன்பும் பற்றும் கொண்ட ரசிகர்கள். அவர்களைதான் சினிமா மற்றும் அரசியலில் சேர்த்துவைத்தார். இதேபோல் தனது இரக்க குணத்தால் பல தலைவர்களின் அன்பையும் சேர்த்து வைத்துள்ளார். அதனால் தான் அவரை தேடி எல்லாம் வருகிறது. எல்லோரும் வருகிறார்கள்.