முதல்வர் ஸ்டாலின் படத்துக்கு கன்னட அமைப்பு இழிசெயல்- அதே பாணியில் திருச்சியில் அய்யாகண்ணு கோஷ்டி!
திருச்சி: காவிரி பிரச்சனையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவப் படத்தை கன்னட அமைப்பினர் இழிசெயலில் ஈடுபட்ட அதே பாணியில் கர்நாடகா முதல்வர் சித்தராமையா உருவப்படத்தை வைத்து திருச்சியில் விவசாயிகள் பதில் கொடுத்தனர்.
காவிரியில் வினாடிக்கு 5,000 கன அடி நீரை மட்டும் தமிழ்நாட்டுக்கு திறக்க வேண்டும் என்கிற காவிரி மேலாண்மைய உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதனால் தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

காவிரியில் தமிழ்நாட்டுக்கு நீர் திறக்கவே கூடாது என்கிறது கன்னட அமைப்புகள். இதற்காக கன்னட விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று பெங்களூர் பந்த் போராட்டம் நடத்தப்படுகிறது.
மேலும் மண்டியா, சாம்ராஜ்நகர், மைசூர் ஆகிய இடங்களிலும் தமிழ்நாட்டுக்கு நீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நீடிக்கின்றன. கர்நாடகா தழுவிய பந்த் போராட்டம் செப்டம்பர் 29-ந் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூர் பந்த் போராட்டத்தை கர்நாடகா அரசு தடுக்காது; பந்த் போராட்டம் நடத்தலாம் என கர்நாடகா முதல்வர் சித்தராமையா கூறியிருந்தார். பெங்களூரில் 144 தடை உத்தரவு அமலில் இருந்த போதும் கன்னட விவசாயிகள், கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்தின் போது கன்னட அமைப்பினர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவப் படத்துக்கு பொட்டு வைத்து மாலையிட்டு திதி கொடுக்கும் இழி செயலை செய்தனர். பின்னர் பெண்கள், முதல்வர் ஸ்டாலின் உருவப் படம் முன்பு ஒப்பாரிப் போராட்டம் நடத்தினர்.

இதற்கு பதில் தரும் வகையில் தமிழ்நாட்டில் திருச்சியில் விவசாயிகள் கர்நாடகா முதல்வர் சித்தராமையா உருவப் படத்துக்கு அதே போல பொட்டு வைத்து மாலையிட்டு திதி கொடுத்து ஒப்பாரி வைத்தனர். திருச்சியில் விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் கடந்த 55 நாட்களாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று எலிகளை வாயில் கடித்து நீர் பற்றாக்குறையை வெளிப்படுத்தும் வகையில் அய்யாகண்ணு கோஷ்டியினர் போராட்டம் நடத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#WATCH | Tamil Nadu: Farmers in Trichy staged a protest, demanding the release of Cauvery water from Karnataka. pic.twitter.com/IDHL0H8ktq
— ANI (@ANI) September 26, 2023












Click it and Unblock the Notifications