அவமதிக்கப்படவும் இல்லை.. அலறவும் இல்லை.. புலியை முறத்தால் அடித்த பரம்பரை நாங்க.. தமிழிசை பதிலடி
திருச்சி: புலியை முறத்தால் அடித்த பரம்பரையில் வந்தவள் நான் என ஆளுநர் அவமதிப்பு குறித்த கேள்விக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ஆளுநர்கள் அவமதிக்கப்படுகிறார்கள் என முரசொலியில் செய்தி வெளியானது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது அவர் கூறுகையில் ஆளுநர்கள் அவமதிக்கப்படுகிறார்கள் என்பதை மகிழும் கூட்டம் தமிழகத்தில் உள்ளது. நான் அதை பற்றி கவலைப்படவில்லை.

அலறவில்லை
நான் எங்கும் அவமதிக்கப்படவும் இல்லை. அலறவும் இல்லை. புலியை முறத்தினால் அடித்த பரம்பரையில் வந்தவள் நான். இன்னொரு மாநிலத்தில் நமது தமிழகத்தை சேர்ந்த சகோதரி மதிக்கப்படவில்லை என்று இங்கு உள்ளவர்கள் மனநிலை இருந்தால் அதற்கு நான் ஒன்றும் சொல்ல முடியாது.

தேசியக் கல்வி கொள்கை
தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த கொள்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி உள்ளன. தேசிய கல்வி கொள்கையில் குறைபாடுகள் இருந்தால் அதை அரசிடம் சுட்டிக் காட்டலாம். அதை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என சொல்வது சரியானதாக இருக்காது.

பொதுத் தேர்வு
அகில இந்திய தேர்வுகளை எதிர்கொள்ள மாணவர்களை தயார் செய்வது அவசியம். தமிழகத்தில் உள்ள ஆசிரியர்களும் பெற்றோர்களும் தேசிய கல்விக் கொள்கை குறித்து கருத்துகளை தெரிவித்துள்ளனர். 3, 5, 8 ஆம் வகுப்பு மாணவர்கள் பொது தேர்வு எழுத தயாராக இருக்கிறார்கள் என தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.

கேசிஆருடன் மோதல்
அண்மையில் ஒரு விழாவில் கலந்துகொண்ட தமிழிசை சவுந்திரராஜன், ஒரு பெண் ஆளுநராக நான் அவமதிக்கப்பட்டேன். பெண் ஆளுநர் பாரபட்சமாக நடத்தப்பட்டதை இந்த மாநிலத்தின் சரித்திரம் எழுதும். ஆளுநர் அலுவலகத்திற்கான மதிப்பும் மரியாதையும் இருக்க வேண்டும். ஆனால் அது தெலுங்கானாவில் இல்லை என பேசியிருந்தார். தமிழிசைக்கும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கும் மோதல் போக்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications