ஒரு புறம் பரபரக்கும் மீட்பு பணி... மற்றொரு புறம் சுஜித் பெற்றோருக்கு கவுன்சிலிங்
Recommended Video
திருச்சி: மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்க மீட்பு பணிகள் பரபரப்பாக நடக்கும் சூழலில், அந்தக் குழந்தையின் பெற்றோருக்கு கவுன்சிலிங்கும் அளிக்கப்படுகிறது.
குழந்தை சுஜித் எப்படியாவது மீட்கப்படமாட்டானா என கடந்த நான்கு நாட்களாக தமிழகத் தாய்மார்கள் தவித்து வருகிறார்கள்.
வீட்டின் வரவேற்பறைகளில் செய்தித் தொலைக்காட்சிகளை பார்த்தவாறே அன்னம் தண்ணீரின்றி சுஜித்தை மீட்பதற்காக எத்தனையோ தாய்மார்கள் உருக்கமுடன் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
உங்கள் உதவியும் தேவைப்படும்.. கொத்தமங்கலம் வீரமணி குழுவிற்கு மீண்டும் அழைப்பு.. இதுதான் காரணம்!
மீட்புப் படை தீவிரம்
ஆழ்துளை கிணற்றில் சிறுவன் சுஜித் விழுந்து சுமார் 72 மணி நேரங்கள் ஆகிவிட்டன. ஆனால் அவனை மீட்பதற்கு இயற்கை இன்னும் வழிவிடவில்லை. அரசு தரப்பில் ஆகச்சிறந்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தவிப்பு
சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்த வெள்ளிக்கிழமை மாலை முதல் அவனது பெற்றோர் அதுவும் குறிப்பாக அந்தக் குழந்தையின் தாய் அழுது அழுது அவரது கண்ணீரே வறண்டு விட்டது எனக் கூறலாம். அந்தளவுக்கு மகனை நினைத்து கதறி ஓலமிட்டு வருகிறார்.
கவுன்சிலிங்
சுஜித் தாயாரின் அழுகை அங்கு களத்தில் இருப்பவர்களை பதைபதைக்க செய்துள்ளது. இந்நிலையில் திருச்சியில் இருந்து சென்றுள்ள உளவியல் நிபுணர்கள் மூலம் கவுன்சிலிங் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் கள யதார்த்தம் அவர்களுக்கு தெரியப்படுத்தப்படுகிறது.
போலீஸ் விரட்டியடிப்பு
நடுக்காட்டுப்பட்டியை ஏதோ சுற்றுலா தலம் போல் கருதி, சாரை சாரையாக மக்கள் அங்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் போலீஸார் அவர்களை மீட்புப் பணி நடைபெறும் இடத்தின் அருகே யாரையும் விடாமல் விரட்டி அடித்து வருகின்றனர்.
போலீஸ் குவிப்பு
மீட்புப் பணிகள் இறுதிகட்டத்தை நோக்கி சென்றுள்ளதால், அங்கு போலீஸ் அதிகளவில் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் அரசியல் கட்சித் தலைவர்களும் மாறி மாறி வந்து செல்வதால் அவர்களுக்குரிய பாதுகாப்பு ஏற்பாட்டையும் போலீஸ் கவனிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.