பாஜகவை நோக்கி நகரும் பாமக தொண்டர்கள்! அண்ணாமலையை அன்புமணி கண்டித்த பின்னணி! திருமாவளவன் புது தகவல்!
திருச்சி: பாஜகவை நோக்கி பாமக தொண்டர்கள் நகரத் தொடங்கியிருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வெல்லும் ஜனநாயகம் என்ற பெயரில் வரும் டிசம்பர் மாதம் திருச்சியில் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டிற்கான இடத்தை நேரில் பார்வையிட்டு தேர்வு செய்வதற்காக திருச்சி வந்த திருமாவளவன், தாங்கள் நடத்தும் மாநாட்டை திருச்சி புறநகர் பகுதியில் வைத்துக்கொள்ளுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளார்கள் என்றார்.

டிசம்பர் 22 மற்றும் 23ஆம் தேதிகளில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுவதால் அன்றைய தினம் திருச்சி நகருக்குள் மாநாட்டை நடத்த வேண்டாம் என காவல்துறை தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் இதனால் புறநகரில் இடம் தேர்வு வந்ததாகவும் கூறினார். அப்போது அங்கிருந்த செய்தியாளர் ஒருவர், பெரியார் சிலையை அகற்றுவோம் என அண்ணாமலை கூறியதற்கு அன்புமணி கண்டனம் தெரிவித்திருக்கிறாரே என்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருப்பதாக கூறிக்கொள்ளும் அவர் கண்டனம் தெரிவித்திருப்பதை எப்படி பார்க்கிறீர்கள் எனவும் வினவினார்.
அதற்கு பதிலளித்த திருமாவளவன், பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் ஆகியோரை அடையாளங்களாக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட கட்சி தான் பாமக என்றும் பெரியாரை விமர்சிப்பவர்களுக்கு அன்புமணி கண்டனம் தெரிவிக்காவிட்டால் அவரது கட்சி தொண்டர்களே அதனை ஏற்க மாட்டார்கள் எனவும் கூறினார். அதுமட்டுமல்ல பாஜகவை நோக்கி பாமக தொண்டர்கள் நகர்வதால் அண்ணாமலையை கண்டிக்க வேண்டிய சூழல் அன்புமணி வந்ததாக தெரிவித்தார்.
அண்ணாமலையின் பாதயாத்திரையில் கலந்துகொள்பவர்கள் பாஜகவினரே கிடையாது என்றும் சாதி அமைப்புகளில் இருந்தும் கூட்டணிக் கட்சிகளில் இருந்தும் ஆட்களை அழைத்துச் செல்கிறார்கள் எனவும் திருமாவளவன் கூறியிருக்கிறார்.
இதனிடையே வரும் டிசம்பரில் தாங்கள் நடத்தும் வெல்லும் ஜனநாயகம் மாநாட்டில் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரையும் பங்கேற்க வைப்போம் என்றும் காங்கிரஸ் தலைவர் கார்கே கலந்துகொள்வதாக சொல்லியிருக்கிறார் இன்னும் உறுதி செய்யவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications