வீடு, வணிக, குடிநீர் குழாயில் மின் மோட்டார்கள்.. வீடுகளுக்குள் நுழைந்து ஆபீசர்ஸ்.. திருச்சியில் பரபர
திருச்சி: வீட்டு, வணிக குடிநீர் இணைப்புகளில் சட்டவிரோதமாக மின்மோட்டார்களை பொருத்தி, தண்ணீரை உறிஞ்சினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சி மாவட்ட மக்களுக்கு, தேவையான குடிநீரானது காவிரி ஆற்றிலிருந்தே பெறப்பட்டு வழங்கப்படுகிறது... இந்த காவிரி நீரைதான், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் வினியோகம் செய்யப்படுகிறது.

திருச்சி மாவட்டம்: கொள்ளிடம் ஆறுகளிலிருந்து பிரிந்து ஓடும் தண்ணீர்தான், டெல்டா மாவட்டங்கள் மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களுக்கும் விவசாயம் செய்வதற்கு நீராதாரமாக விளங்கி வருகிறது.
அதேபோல, பருவ மழையின்போது, மழை அதிகமாக பெய்வதும், மேட்டூர் அணையில் இருந்து நீர்வரத்து அதிகரித்து திறக்கப்படுவதனால் அந்த தண்ணீர் காவிரி, கொள்ளிடம் வழியாக டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு குறுவை, சாகுபடி மற்றும் மற்ற சாகுபடி பயிர்களுக்காக உறுதுணையாக இருந்து வருகிறது. எனினும், கடந்த மார்ச் மாதத்திலிருந்து வறட்சி சூழ்ந்து கொண்டது. இதுவரை இல்லாத அளவுக்கு காவிரி, கொள்ளிடம் ஆறுகள் வறண்டுபோய் கிடக்கிறதே என்று விவசாயிகளும் வேதனைப்பட்டனர்.
நிலத்தடி நீர்மட்டம்: மொத்தத்தில், காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைவு, மழை அளவு குறைவு, நிலத்தடி நீர்மட்டம் குறைவு போன்ற காரணங்களினால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்று 3 மாதங்களுக்கு முன்பே சமூக ஆர்வலர்கள் கூறியிருந்தனர்.. இதே போன்ற நிலைமை நீடித்தால், திருச்சியில் வரலாறு காணாத அளவிற்கு மக்களுக்கு தண்ணீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அச்சம் தெரிவித்திருந்தனர்.
இப்போது திருச்சியில் நீர்த்தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியிருக்கிறது.. எனவேதான், மாவட்டம் முழுவதும் குடிநீர் குழாய்கள் இணைப்பது, சரி செய்வது, புதிய குழாய்கள் பொருத்துவது போன்ற பணிகள் துரிதமாகி கொண்டிருக்கின்றன.. இதற்காக, வாரந்தோறும் ஒரு சில பகுதிகளில் குடிநீர் வழங்குவது நிறுத்தப்பட்டு வருகிறது.
ஆனால், மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் குடிநீரில் கலப்படம் கலந்து வருவதாகவும் அதனால் பல்வேறு தொற்றுகள் பரவுவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது.
குடிநீர்: அதேபோல, பலரும், சட்டவிரோதமாக குடிநீரை உறிஞ்சும் மோட்டாரை பயன்படுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து, புகார்வரும் அந்தந்த பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டிருந்தார்..
அதன்படியே, திருச்சி மாநகராட்சி மண்டலம் 4, வார்டு எண் 56க்கு உட்பட்ட ராம்ஜி நகர் பகுதியில் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இன்று காலை வீடு வீடாகச் சென்று குடிநீர் விநியோகம் குறித்து திடீர் ஆய்வு செய்தனர்.. அப்போது, அங்கிருந்த 15 வீடுகளில் சட்டவிரோதமாக குடிநீர் விநியோக குழாயில், மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சியது கண்டறியப்பட்டது.. இதையடுத்து சட்டவிரோதமாக குடிநீர் உறிஞ்ச பயன்படுத்திய 15 மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
குடிநீர் குழாய்: இதையடுத்து, மாநகராட்சி ஆணையர் சரவணன் முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்திருக்கிறார்.. அதில், "மாநகர பகுதிகளில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மின்மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுவது தண்டனைக்குரிய குற்றமாகும். மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுவதால் பொதுமக்கள் அனைவருக்கும் சீராக குடிநீர் கிடைக்காமல் போகிறது.
மேலும், தொடர்ந்து மின் மோட்டார்கள் மூலம் குடிநீர் உறிஞ்சினால் மின்மோட்டார் பறிமுதல் செய்யப்படுவதுடன், அபராதமும் விதிக்கப்படும். குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்படும். குறிப்பாக வீட்டு, வணிக குடிநீர் இணைப்புகளில் மின்மோட்டார்களை பொருத்தி தண்ணீரை உறிஞ்சினால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
எச்சரிக்கை: மாநகராட்சியில் பணிபுரி கூடிய அதிகாரிகள் இனிவரும் காலங்களில் இது போன்ற புகார்கள் வராத வண்ணம் பணியாற்ற வேண்டும். சட்டவிரோதமான குடிநீரை பயன்படுத்தினால், யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என மாநகராட்சி ஆணையர் சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications