4 வருஷமா ஏன் வரல? திருநாவுக்கரசர் MPயை ரவுண்டு கட்டிய திருச்சி மக்கள்! ரசிக்கும் திமுக நிர்வாகிகள்!
திருச்சி: திருச்சி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் திருநாவுக்கரசரிடம், 4 வருஷமா எங்கே போயிருந்தீங்க இப்ப மட்டும் எதுக்கு வர்ரீங்க எனக் கேட்டு அவரை திக்குமுக்காட வைத்த நிகழ்வு நடந்துள்ளது.
திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியில் மக்கள் குறைகளை கேட்கச் சென்ற திருநாவுக்கரசரிடம், உங்களை பார்க்க 20 முறைக்கு மேல் உங்கள் அலுவலகம் வந்தும் நீங்கள் இல்லை என்றும் பிறகு எதற்கு உங்களுக்கு ஓட்டுப்போட்டோம் எனவும் இளைஞர் ஒருவர் சரமாரி கேள்வி எழுப்பினார்.

அப்போது திருநாவுக்கரசருடன் நின்று கொண்டிருந்த அவரது ஆள் ஒருவர், ஏம்பா ஆபிசுக்கு வாங்க பேசிக்கொள்ளலாம் எனக் கூறியும் அதனை அந்த இளைஞர் பொருட்படுத்தவில்லை. கேள்வி மேல் கேள்வி கேட்டு தன்னை துளைத்து எடுத்ததால் ஒரு கட்டத்தில் டென்ஷன் ஆன திருநாவுக்கரசர், ஏன்யா இதெல்லாம் நான் பார்க்குற வேலை இல்லை என்றும் கவுன்சிலர், மேயர் பார்க்க வேண்டியது என்றும் சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர்கள் இருக்கிறார்களே எனவும் கோர்த்துவிட்டார்.
இதனை திமுகவினர் துளியும் ரசிக்கவில்லை. தன் மீதான மக்களின் அதிருப்தியை எப்படி நைஸாக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பக்கம் திருப்பி விடுகிறார் பாருங்க என திருநாவுக்கரசர் பற்றி அமைச்சர் கே.என்.நேரு, அன்பில் மகேஷிடம் முறையிட்டுள்ளார். திருச்சி மக்களவைத் தொகுதிதியில் மீண்டும் போட்டியிடும் திட்டத்தில் உள்ள திருநாவுக்கரசர் இப்போது தொகுதி உலா வரத் தொடங்கியுள்ளார்.
ஆனால் மக்கள் மிகத் தெளிவாக இருப்பதால் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் பஞ்சாயத்து வெடித்து வருகிறது. இதேபோல் தான் தமிழகத்தின் பல இடங்களிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்கள் கேள்விகளால் துளைத்தெடுத்து வருகின்றனர். அண்மையில் கூட கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே ஜோதிமணி எம்.பி.யிடம் இதே போல் ஒருவர் கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.












Click it and Unblock the Notifications