திமுக இளைஞரணிக்கு புதிய நிர்வாகிகள்! திருச்சியில் உதயநிதி நடத்திய இன்டர்வியூ! குவிந்த இளைஞர்கள்!
திருச்சியில் திமுக இளைஞரணி பதவிகளுக்கு இண்டர்வியூ நடத்திய உதயநிதி.
திருச்சி: திமுக இளைஞரணியில் தமிழ்நாடு முழுவதும் புது முகங்களை களமிறக்கும் திட்டத்தில் உள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருச்சியில் மத்திய மண்டலத்தை சேர்ந்தவர்களுக்கு நேர்காணல் நடத்தி முடித்திருக்கிறார்.
நேர்காணலில் பங்கேற்க வந்தவர்கள் சரியான வயதை தான் கூறுகிறார்களா என்பதை ஆராய தனி டீம் பணியாற்றியது.
சென்னை, மதுரை, திருச்சி, என மூன்று மண்டலங்களில் நேர்காணல் நடத்தி முடித்திருக்கும் உதயநிதி ஸ்டாலின், கோவை, சேலம் வேலூர் என அடுத்தடுத்த மண்டலங்களிலும் நேர்காணல் நடத்தவுள்ளார்.

திமுக இளைஞரணி
திமுகவில் உள்ள மற்ற அணிகளை காட்டிலும் இளைஞரணியில் பதவிகளை வாங்குவதற்கு அக்கட்சியினர் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது. இதற்கு காரணம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் நேரடி நிர்வாகத்தின் கீழ் அந்த அணி இயங்குவதே ஆகும். இதனால் தான் திமுகவில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட முக்கியப் பிரமுகர்கள் பலரும் எப்பாடு பட்டாவது தங்கள் வாரிசுகளுக்கு இளைஞரணியில் பதவி வாங்கி விட வேண்டும் என துடிக்கிறார்கள்.

உதயநிதி ஸ்டாலின்
ஆனால் உதயநிதி ஸ்டாலினோ முழுக்க முழுக்க நேர்காணல் மூலம் எந்த சிபாரிசும் இல்லாமல் இளைஞரணிக்கு நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். திமுக இளைஞரணியில் மாவட்ட அமைப்பாளர், மாநகர அமைப்பாளர் பதவியிடங்களுக்கு விருப்பமனு கொடுத்தவர்களிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேர்காணல் நடத்த ஆரம்பித்துவிட்டார். கடந்த ஜனவரி மாதம் 24ஆம் தேதி சென்னையில் நேர்காணல் நடத்திய அவர் பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி மதுரையில் இண்டர்வியூ நடத்தினார். நேற்று திருச்சியில் வைத்து உதயநிதி நடத்திய நேர்காணலில் திருச்சி தெற்கு, திருச்சி வடக்கு, மத்திய, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

வழக்கம் போல்
கடந்த நேர்காணல்களில் கேட்டதை போலவே கட்சியில் எப்போதிருந்து உறுப்பினர், என்ன வேலை செய்கிறீர்கள், என்ன படித்திருக்கிறீர்கள், வருமான ஆதாரம் என்ன?,குடும்பத்தில் யாராவது பொறுப்பில் இருக்கிறார்களா என்பன உள்ளிட்ட பல கேள்விகளை வழக்கம் போல் எழுப்பியிருக்கிறார் உதயநிதி.

துணைச் செயலாளர்கள்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளர்களான ரகு, இளையராஜா, அப்துல் மாலிக், பிரகாஷ், பிரபு , சீனிவாசன், பிரதீப் ராஜா, ஆனந்தகுமார், ஜோயல் உள்ளிட்டோர் இந்த நேர்காணலின் போது உடனிருந்தனர். இதனிடையே நேர்காணலில் பங்கேற்க வந்தவர்கள் தங்கள் வயதை சரியாக தான் கூறியிருக்கிறார்களா என்பதை ஆராய தனி டீம் பணியாற்றியது.












Click it and Unblock the Notifications