'பொது சிவில் சட்டம்’ இஸ்லாமியர்களை அச்சுறுத்தும் வகையில் பேசுகின்றனர்: பாஜக வேலுார் இப்ராஹிம் ஆவேசம்
திருச்சி: பொது சிவில் சட்டம் வருகிறது என்றவுடன் இஸ்லாமியர்களை அச்சுறுத்தும் விதமாக திமுக. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் பேசி வருகின்றனர் என்றும்.. நாங்கள் இது தொடர்பாக விவாதிக்க தயாராக இருக்கிறோம் என்றும் திருச்சியில் தமிழக சிறுபான்மையினர் பிரிவின் மாநில பாஜக தலைவர் வேலூர் இப்ராஹிம் பேசியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட சிறுபான்மையினர் பிரிவின் ஆய்வு கூட்டம் திருச்சியில் மாநில மகளிர் அணி தலைவி டெய்சி தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறுபான்மையினர் பிரிவின் மாநில தலைவர் வேலூர் இப்ராஹிம் மற்றும் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு வேலூர் இப்ராஹிம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: -

மோடியின் கரத்தை பலப்படுத்த வேண்டும்
இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சிறுபான்மையினர் மக்களுக்கு பாரதிய ஜனதா கட்சி என்ன செய்துள்ளது என்ன திட்டங்களை கொண்டு வந்துள்ளது என்பது குறித்து இங்கு ஆலோசிக்கப்பட்டது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலக்கத்தில் வேட்பாளர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி மோடியின் கரத்தை பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தமிழக முழுவதும் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

கேவலமான செயல்
தமிழகத்தில் ஒழுக்கக் கேடான செயல்கள் மது போதையில் தள்ளாடுகிற நிலை இந்த திமுக ஆட்சியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திருச்சியில் பப் அமைப்பது தவறானது. அதனை எதிர்த்த பாஜகவினரை காவல்துறையினரை கொண்டு இரும்புக்கரத்தால் அடக்குவது கேவலமான செயல். முதல்வர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதிக்கு மாறாக செயல்படுகிறார். ஆட்சிக்கு வந்தால் மது ஒழிக்கப்படும் என ஸ்டாலினும், கனிமொழியும் கூறினர்.

எதிரிக்கட்சியாக பார்க்காமல்
பொது சிவில் சட்டம் வருகிறது என்றவுடன் இஸ்லாமியர்களை அச்சுறுத்தும் விதமாக திமுக. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் பேசி வருகின்றனர். நாங்கள் இது தொடர்பாக விவாதிக்க தயாராக இருக்கிறோம். இந்துத்துவா சித்தாந்தத்தை பேசுகிறவர்களுக்கு எதிராக பயங்கரவாத சக்திகள் தலைநிமிர்ந்து இருக்கிறார்கள். எனவே, ஸ்டாலின் எங்களை எதிரிக்கட்சியாக பார்க்காமல் எதிர்க்கட்சியாக பார்த்து ஜனநாயகத்தின் அடிப்படைகளில் எங்களது உரிமையினை தடுக்க வேண்டாம் என்று கோரிக்கை வைக்கிறோம்.

கட்டாய கல்வி திட்டம் வந்ததால்
சிறுபான்மை மாணவர்களுக்காக உதவித்தொகையை ரத்து செய்ததாக திமுகவும் அதன் கூட்டணி கட்சியினரும், கோபால்சாமியும் தவறாக கூறி வருகின்றனர். ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை கட்டாய கல்வி திட்டம் வந்ததால் மானியம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. திமுக ஆட்சியில் சிறுபான்மையினர் பிரிவுக்காக எந்த வித நன்மையும் செய்யவில்லை" இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications