அச்சத்தின் உச்சத்தில் பாஜக.. ராகுல் காந்தி அஞ்ச வேண்டாம்.. மாபெரும் போராட்டத்தை அறிவித்த திருமாவளவன்
திருச்சி: ராகுல் காந்திக்கு ஆதரவாகக் காங்கிரஸ் சார்பில் பல இடங்களில் போராட்டம் நடைபெறுகிறது. இதற்கிடையே விசிக சார்பிலும் ராகுல் காந்திக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
ராகுல் காந்தி 2019 மக்களவை தேர்தல் பிரசாரத்தின் போது கர்நாடக மாநிலம் கோலர் பகுதியில் பேசிய பேச்சு சர்ச்சையானது. இது தொடர்பாக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான புர்னேஷ் மோடி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்
அதாவது, அங்குப் பேசிய ராகுல் காந்தி, மோடி என்ற பெயர் வைத்த அனைவரும் ஒரே போல இருப்பதாகக் கூறி, அடுத்து ஒரு சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்தார். இதற்காக அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

ராகுல் காந்தி
ராகுல் ஒட்டுமொத்த மோடி சமூகத்தையே இழிவுபடுத்திவிட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நடந்த வந்த நிலையில், சமீபத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. ராகுல் காந்தி குற்றவாளியாக அறிவித்த மாஜிஸ்திரேட் எச்.எச்.வர்மா, அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தார். இதன் காரணமாக ராகுல் காந்தி எம்பி பதவியை இழந்துள்ளார். நேற்று முன்தினம் அவர் எம்பி பதவியை இழந்ததாக அறிவிப்பு வெளியானது.

போராட்டம்
இதற்கிடையே நேற்றைய தினம் வயநாடு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ராகுல் காந்தி மீது எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைக்கு பல்வேறு எதிர்க்கட்சிகளும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். காங்கிரஸ் சார்பில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஏற்கனவே போராட்டம் தொடங்கிவிட்டது. திங்கள் முதல் நாடு முழுக்க தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே விசிக சார்பிலும் ராகுல் காந்திக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

அச்சத்தின் உச்சத்தில்
இது தொடர்பாகத் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ராகுல் காந்தி எந்தவொரு சமூகத்திற்கு எதிராகவும் பேசவில்லை. இதனால் அவர் எதற்கும் அஞ்சத் தேவையில்லை. அதானியை விமர்சித்து ராகுல் காந்தி பேசியிருந்தார். மேலும், பங்குச்சந்தை ஊழல் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இதனால் பாஜக அச்சத்தின் உச்சத்தில் இருக்கிறது. இதன் காரணமாகவே ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவியைப் பறித்துள்ளனர்.

விசிக போராட்டம்
ராகுல் காந்தியைத் தேர்தலில் நிற்க விடாமல் செய்வதே அவர்கள் நோக்கம். எதிரியே இல்லை என்ற சூழலில் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்ற இழிவான அரசியலை பாஜக கையில் எடுத்துள்ளது. இதைக் கண்டித்து விசிக சார்பிலும் விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். ராகுல்காந்தி எதற்கும் அஞ்சத்தேவையில்லை. அவர் தனது போராட்டத்தில் பின்வாங்கத் தேவையில்லை.. மேலும் முன்னோக்கிச் செல்ல வேண்டும்.

ஒற்றுமை யாத்திரை
ராகுல் காந்தி நாட்டின் ஒற்றுமைக்காக நாடு முழுக்க தாக்கத்தை ஏற்படுத்திய ஒற்றுமை யாத்திரையைத் தொடங்கினார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாத யாத்திரையில் அவர் பாஜகவை அம்பலப்படுத்தியுள்ளார். இது அவர்களுக்கு ஆத்திரத்தைத் தந்துள்ளது. ராகுல் காந்தி நல்ல நோக்கத்திற்காக பாஜகவை எதிர்த்துப் போராடி வருகிறார். அவரது போராட்டத்தில் துணையாக நாங்கள் இருக்கும். அவரது போராட்டம் நிச்சயம் வெல்லும்.

மம்தா
காங்கிரஸ் அல்லாத ஒரு கூட்டணிக்கு மம்தா பானர்ஜி முயலக் கூடாது. அது அவருக்கும் நல்லதில்லை.. நாட்டிற்கும் நல்லதில்லை. இது எப்படிப் பார்த்தாலும் பாஜகவுக்கே ஆதரவாக அமைந்துவிடும். பாசிச சக்திகளை வீழ்த்த மம்தா பானர்ஜி 2024 மக்களவை தேர்தலைக் காங்கிரஸ் கட்சியோடு இணைந்து சந்திக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே அணியில் இருந்து பாசிச சக்தியை வீழ்த்த வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications