மணப்பாறை அருகே ஒரு பூத்தில் வாக்குப் பதிவு 3 மணி நேரத்திற்கு மேலாக நிறுத்தம்! மக்களிடம் பேச்சுவார்த்தை
திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டசபைத் தொகுதிக்குள்பட்ட வெள்ளையக்கோன்பட்டி அருகே உள்ள ஒரு வாக்குச்சாவடியில் 3 மணி நேரத்திற்கு மேலாக வாக்குப் பதிவு நடைபெறாதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலில் வாக்குப் பதிவு இன்று தொடங்கியது. இது மாலை 6 மணி வரை நடைபெறும். இந்த நிலையில் தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

காலை முதலே தமிழகத்தில் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் தங்கள் வாக்குகளை அளித்தனர்.
தமிழகத்தில் இந்த ஆண்டு வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வெள்ளையக்கோன்பட்டியில் அமைந்துள்ள வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவு 3 மணி நேரத்திற்கு மேலாக நடைபெறாமல் இருக்கிறது.
வாக்குச் சாவடிகளில் 200 மீட்டருக்குள் வாக்கு சேகரிக்கக் கூடாது என்பது தேர்தல் விதிமுறை! ஆனால் இந்த பூத்தில் சிலர் 200 மீட்டருக்குள் வாக்கு சேகரித்ததாக சொல்லப்படுகிறது. அப்போது அங்கு வந்த எஸ்பி தலைமையிலான அதிரடிபடையினர் அவர்கள் மீது தடியடி நடத்திய போது, அங்கு வரிசையில் நின்றிருந்த பொதுமக்கள் மீது தடியடி நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 3 மணி நேரத்திற்கு மேலாக வாக்கு பதிவு செய்யவில்லை. இது தொடர்பாக அதிகாரிகள் அவர்களிடம் பேசியும் அவர்கள் யாரும் வாக்களிக்கவில்லை. அங்கு மொத்தம் 618 வாக்குகள் இருக்கும் நிலையில் வெறும் 316 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. மக்களை சமாதானப்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது.













Click it and Unblock the Notifications