திருச்சி: மொத்த கிராமமே எங்கள் நிலம்! வக்பு வாரியம் சுற்றறிக்கை! மக்கள் போராட்டத்தால் பேச்சுவார்த்தை
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு ஒட்டுமொத்த கிராமமே வக்பு வாரியத்திற்குச் சொந்தம் என்றும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் ஜீயபுரத்தில் இருக்கும் ஒரு கிராமமே வக்பு வாரியத்திற்குச் சொந்தம் எனச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதால் ஒரு தரப்பு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். இதையடுத்து சமாதானம் செய்யும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
சுற்றறிக்கை
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஜீயபுரத்தில் பள்ளிவாசல் ஒன்று செயல்பட்டு வருகிறது. உள்ளது. அதைச் சுற்றிப் பல மக்கள் வசித்து வருகின்றனர். இதனிடையே அங்குள்ள ஒட்டுமொத்த கிராமமே தனக்குச் சொந்தம் என்றும் இதன் காரணமாகப் பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் அவற்றைச் சார்ந்த அப்பகுதியில் உள்ள சொத்துக்கள் விற்கவோ வாங்கவோ பதிவு செய்யக்கூடாது என தமிழ்நாடு வக்பு வாரியம் சார்பில் சார் பதிவாளர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.
குடும்பங்கள்
ஜீயபுரம் பகுதியில் பல குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் அங்கேயே பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இந்தச் சூழலில் தமிழ்நாடு வக்பு வாரியம் சார்பில் திடீரென அனுப்பப்பட்டுள்ள இந்த சுற்றறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சுற்றறிக்கை காரணமாக அப்பகுதி மக்கள் சொத்துகளை வாங்கவோ, விற்கவோ முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
போராட்டம்
இந்த சுற்றறிக்கை கண்டித்தும், இந்த உத்தரவை வாபஸ்பெற கோரியும் அவசர ஆலோசனைக் கூட்டம் பழைய மதுரை ரோடு பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அங்குள்ள ஜமாத் தலைவர் சையதுஷாகிர், "நதர்ஷா பள்ளிவாசல் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 150 வருட காலமாக நாங்கள் இங்கு வாழ்கிறோம். எங்களிடம் பட்டா பத்திரம் அனைத்தும் உள்ளது. இங்கு சுமார் 7000 வீடுகள் உள்ளது.
நடவடிக்கை தேவை
மொத்தம் 14,000 பேர் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் திடீரென வக்பு வாரியத்தால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களது சொத்துக்கள் விற்பனை செய்யக்கூடாது எனச் சார்பதிவாளர் அலுவலகத்திலிருந்து அறிக்கை அனுப்பியுள்ளனர். இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கின்றது. நாங்கள் வாங்கிய கடனை கூட கட்ட முடியாமல் தவிக்கின்றோம். ஆகவே, தமிழக அரசு இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
பேச்சுவார்த்தை
ஒட்டுமொத்த கிராமமே தங்களுக்குச் சொந்தம் என்று வக்பு வாரியம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து இன்று பிற்பகல், 3 மணியளவில் ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன் இரு தரப்பிற்கும் இடையே சமாதானம் செய்யும் முயற்சியிலும் இறங்கி உள்ளார். இது தொடர்பாகத் திருச்செந்துறை கிராம மற்றும் மக்கள் மற்றும் வக்பு வாரிய அதிகாரிகளுக்குப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.