"இன்னும் பத்தே நாட்கள்!" ராஜீவ் கொலை குற்றவாளிகள் இலங்கைக்கு அனுப்பப்படுவர்.. திருச்சி கலெக்டர் பரபர
திருச்சி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்கள் உண்ணாவிரதம் இருப்பதாகத் தகவல் பரவிய நிலையில், இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ் கடந்த 30 ஆண்டுகளாகச் சிறையில் இருந்தனர்.
அவர்களுக்கு முதலில் விதிக்கப்பட்ட மரண தண்டனை பின்னர் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. சுமார் 30 ஆண்டுகளாகவே அவர்கள் சிறையில் வாடி வந்தனர்.
ராஜீவ் கொலை வழக்கு.. 6 பேர் விடுதலையில் கவர்னர் ஜெனரலாக நடந்து கொண்ட ஆளுநர்கள்.. முரசொலி அட்டாக்
விடுதலை
இதற்கிடையே அவர்கள் ஏழு பேரையும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யத் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது. இருப்பினும், இதற்கு ஆளுநர் அனுமதி அளிக்காத நிலையில், பேரறிவாளன் இது குறித்து வழக்கு தொடர்ந்திருந்தார். உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை முதலில் கடந்த மே மாதம் விடுதலை செய்தது.
உச்ச நீதிமன்றம்
இதேபோல தங்களை விடுதலை செய்ய வேண்டும் என 6 பேரும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவர்களையும் விடுவிக்க உத்தரவிட்டது. இருப்பினும், அவர்களில் முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் திருச்சியில் இருக்கும் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
உண்ணாவிரதம் இல்லை
இதற்கிடையே அவர்கள் நான்கு பேரும் சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருப்பதாகத் தகவல் பரவியது. இதற்கிடையே திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் சிறப்பு முகாமை பார்வையிட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் உண்ணாவிரதம் மேற்கொள்ளவில்லை. அது பொய்யான தகவல்
சில கோரிக்கைகள்
அவர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்தார்கள், அதை நாங்கள் ஏற்படுத்தித் தந்து உள்ளோம். இருவர் நடக்க இடம் வேண்டும் என்றெல்லாம் கேட்டிருந்தார்கள். கூடிய சீக்கிரம் அதைச் செய்து தருகிறோம் என்று கூறியுள்ளோம். இந்தியாவில் தண்டனை பெறும் வெளிநாட்டினர் ஜாமீன் பெற்றாலோ அல்லது விடுதலையானாலோ அவர்களின் வீடு இங்கு இருக்காது. எனவே, அவர்கள் இந்த சிறப்பு முகாமில் தங்க வைக்கப்படுவார்கள்.
சொந்த நாட்டிற்கு
அடுத்து அவர்களின் சொந்த நாட்டிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அனைத்து வெளிநாட்டினர் விடுதலையானாலும் இதுதான் நடைமுறை. இப்போது அதற்கான நடைமுறைதான் நடக்கிறது. உள்ளே இருப்பவர்கள் அவர்களே தான் சமைத்துச் சாப்பிடுகிறார்கள். அவர்கள் கேட்கும் உணவை நாங்கள் ஏற்பாடு செய்து தந்து வருகிறோம். உறவினர்கள் வந்து பார்க்கவும் எந்தவொரு தடையும் இல்லை.
அடுத்த 10 நாட்களில்
தாராளமாகச் சிறப்பு முகாம் இன்சார்ஜ் அனுமதியுடன் வந்து பார்க்கலாம்.. அனைத்து தேவையான வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. உள்ளே செல்போன் போன்ற பொருட்கள் வைத்திருக்க அனுமதி இல்லை. அடுத்த 10 நாட்களில் இவர்களைச் சொந்த நாட்டிற்கு அனுப்பும் பணிகள் ஆரம்பிக்கும். நால்வரில் ஒருவர் மீது மட்டுமே மற்றொரு வழக்கு உள்ளது. அதுவும் சீக்கிரம் முடியும். முடிந்த உடன் அடுத்தகட்ட நடவடிக்கை தொடங்கும்" என்று அவர் தெரிவித்தார்.