ஆளுக்கொரு சேலையில் தூக்கு.. ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை.. திருச்சியை உலுக்கிய அவலம்
Recommended Video

திருச்சி: "நாங்களாதான் இந்த முடிவை எடுத்தோம்.. எங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை" என்று எழுதி வைத்துவிட்டு ஆட்டோ டிரைவர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருச்சி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
திருச்சி செந்தண்ணீர்புரத்தில் வசித்து வந்த தம்பதி பால சகாயராஜ்-யுவராணி. 43 வயதான சகாயராஜ் ஒரு ஆட்டோ டிரைவர். இவர்களுக்கு ஒரு மகள். பெயர் முத்துலட்சுமி. வயது 25. சகாயராஜ் ஆட்டோ ஓட்டியே தன் மகளை நர்சிங் படிக்க வைத்திருக்கிறார்.
இந்நிலையில், இவர்களது வீடு 2 நாட்களாக பூட்டியே இருந்திருக்கிறது. வாடகை கேட்டு வீட்டு ஓனர் விஜயலட்சுமி போன் செய்திருக்கிறார். ஆனால் செல்போன் ஸ்விட்ச் ஆப்! இதனால் நேரடியாக நேற்று இரவு வீட்டுக்கே வந்துவிட்டார் விஜயலட்சுமி.

தனித்தனியாக தூக்கு
மாடியில்தான் சகாயராஜ் குடியிருக்கிறார் என்பதால் படிக்கட்டு ஏறியுள்ளார் விஜயலட்சுமி. ஆனால் அப்பவே குப்பென்று துர்நாற்றம் வீசியது. அதனால் ஜன்னல் வழியாக சென்று பார்த்தபோது, சகாயராஜ் ஒரு சேலையிலும், யுவராணி, முத்துலட்சுமி ஒரு சேலையிலும் என தனித்தனியாக தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறி கூச்சலிட்டார்.

அழுகிய உடல்கள்
இது குறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட, விரைந்து வந்த அவர்களும் கதவை உடைத்து உள்ளே சென்றனர். 3 பேரின் உடல்களுமே அழுகி கிடந்தது. உடல்களை மீட்டு, வழக்கு பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்தனர்.

17 வயது மகன்
அப்போதுதான் சகாயராஜூக்கு 17 வயதில் ஒரு மகன் இருந்திருக்கிறான் என்றும், ஒரு மாசத்திற்கு முன்புதான் உடல்நலக்குறைவால் இறந்து போனதும் தெரியவந்தது. அந்த வீட்டில் இருக்க பிடிக்காமல்தான் இந்த வீட்டுக்கு குடும்பத்துடன் சகாயராஜ் குடிவந்திருக்கிறார்.

மன உளைச்சல்
ஆனால் மகன் மறைவை இன்னும் அந்த குடும்பம் மறக்கவில்லை என்பதால் 3 பேருமே மன உளைச்சலில் இருந்திருக்கிறார்கள். இது போக கடன் தொல்லையும் இருந்திருக்கிறது. இதனால் மகன் மறைவு மற்றும் கடன் தொல்லை தாங்காமல் தற்கொலையே செய்து கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளனர்.

உருக்கமான கடிதம்
தற்கொலைக்கு முன்பு ஒரு கடிதத்தையும் சகாயராஜ் எழுதியுள்ளார். "நாங்களாகத்தான் இந்த முடிவை எடுத்தோம். எங்கள் தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை. யுவராணியின் அக்காள் சுசீலாவிடம் 50 ஆயிரம் கடன் பாக்கி இருக்கு. அதனை என் ஆட்டோ விற்று அடைத்துவிடுங்கள்" என்று உருக்கமாக எழுதியிருந்தார். ஒரே குடும்பத்தில் 3 பேருமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications