மோதிரங்களை கீழே போட்ட தங்க நகை வியாபாரி.. மாறி மாறி பார்த்த அக்கா, தம்பி! தூத்துக்குடியில் என்னாச்சு
தூத்துக்குடி: நாளுக்கு நாள் விலைவாசி ஏறியபடியே உள்ளது.. தங்கம் விலை பெருகி கொண்டேயிருக்கிறது.. இதனால் ஏழை எளிய மக்கள், அடிப்படை வாழ்க்கையைகூட வாழ முடியாத அளவுக்கு சிக்கி தவித்து வருகிறார்கள்.. பஞ்சம், பசி, வறுமை தலைவிரித்தாடும்போது, அது திருட்டு, கொள்ளை குற்றங்களுக்கும் வழிவகுத்துவிடும். எனினும், வறுமையிலும் நேர்மையாக வாழ்ந்து கொண்டிருப்பவரை பாராட்டியே ஆக வேண்டும்.. அதனால்தான், தங்களுக்கு சொந்தமில்லாத பொருட்கள், கீழே கிடந்தால் அதை போலீசிலும் ஒப்படைத்துவிடுகிறார்கள். நேற்று தூத்துக்குடியில் என்ன நடந்தது?
2 நாட்களுக்கு முன்பு, திருப்பூர் மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்தது.. காங்கயம், களிமேட்டை சேர்ந்த 55 வயது பெயின்டர் செல்வராஜ்.. இவரது மகள் வித்யாவுக்கு 28 வயதாகிறது.. படித்த பட்டதாரி.

டீ குடிக்க போன காமராஜ்
சம்பவத்தன்று காலை செல்வராஜூம், வித்யாவும், காங்கயம் பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள பேக்கரிக்கு டீ குடிக்க சென்றார்கள். அப்போது ரோட்டில் கிடந்த பையை கண்டெடுத்தனர்.. அதில் ஆதார் கார்டு, வங்கி புத்தகம் மற்றும் 1.5 லட்சம் ரூபாய் ரொக்கம் இருந்தது.
இதையடுத்து, காங்கயம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, உடனடியாக அந்த பையை ஒப்படைத்தனர். பிறகு போலீசார் விசாரித்தபோது, பேக்கரியில் டீ குடிப்பதற்காக வந்த காங்கயத்தை சேர்ந்த காமராஜ் (70) என்பவர் பையை தவற விட்டது தெரிந்தது. அவரிடம் பணத்துடன் பையை போலீசார் ஒப்படைத்ததுடன், தந்தை, மகளை மனமார பாராட்டினார்கள்.
பூங்கொடியின் கண்ணீர் நன்றி
இதேநாளில் நாமக்கல் பள்ளிப்பாளையத்திலும் ஒரு நேர்மை சம்பவம் நடந்தது.. ஆவத்திபாளையம் அடுத்த ராமகிருஷ்ணா நகரை சேர்ந்த 40 வயது பூங்கொடி சாலையில் நடந்து சென்றபோது, தன்னுடைய பர்ஸை தவறவிட்டார். அந்த வழியாக சென்ற, ஈ-காட்டூர் பகுதியை சேர்ந்த கட்டிட, தொழிலாளர்கள் வெள்ளிங்கிரி, பொன்னுசாமி இருவரும், கீழே கிடந்த பர்சை எடுத்து பார்த்துள்ளனர்.. அதில், ஒன்றரை பவுன் நகை, 5,000 ரூபாய், ஆதார், ரேஷன் கார்டு இருந்தது தெரியவந்தது.
உடனே பாளையம் பகுதிக்குட்பட்ட களியனுார் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ரவிகுழந்தைவேலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர், மணி பர்சை தவறவிட்ட பூங்கொடியை வரவழைத்து, நகை, பணத்தை ஒப்படைத்தார். நேர்மையுடன் பணம், நகையை ஒப்படைத்த கட்டிட தொழிலாளர்கள் இருவருக்கும் பூங்கொடி கண்ணீர் மல்க நன்றி சொன்னார்..
மெயின் பஜார் ரோடு
இதோ நேற்றுகூட தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. ஏரல் அருகே பண்டாரவிளை மன்னாரயன் தட்டை பகுதியை சேர்ந்தவர்கள் விஜித்ரா (23).. இவரது தம்பி பொன்செல்வன் (18)... அக்கா, தம்பி இருவரும் நேற்று ஏரல் பஜார் பகுதிக்கு பொருட்களை வாங்க வந்துள்ளனர். அப்போது மெயின் பஜார் ரோட்டில் ஒரு பை ஒன்று கீழே கிடப்பதை கண்டு, அதை திறந்து பார்த்துள்ளனர்..
அதில் 6 தங்க மோதிரங்கள் இருந்ததாம்.. உடனே அந்த பையை எடுத்துக் கொண்டு இருவரும் ஏரல் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, விவரத்தை சொல்லி, பையையும் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
6 தங்க மோதிரங்கள்
உடனே இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மெயின் ரோட்டிலிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தார்.. அப்போது நகை வியாபாரி ஒருவர்,. ஒரு கடையில் இருந்து இன்னொரு கடைக்கு இந்த தங்க மோதிரத்தை எடுத்து செல்லும்போது தவறவிட்டது தெரியவந்தது.
இதையடுத்து தங்க மோதிரங்களை பையுடன் தவற விட்ட நகை வியாபாரி யார் என்று விசாரித்து, அவரை ஸ்டேஷனுக்கு வரச்சொல்லி பத்திரமாக ஒப்படைத்தனர். மோதிரங்களை போலீசில் ஒப்படைத்த அக்கா தம்பி இருவரின் நேர்மையையும் ஏரல் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி பாராட்டி, பொன்னாடையும் அணிவித்து, பரிசும் வழங்கி வாழ்த்தினார்.

விஜித்ரா மகிழ்ச்சி
இது குறித்து விஜித்ரா சொல்லும்போது, "பஜாருக்கு பொருட்கள் வாங்க வந்திருந்தோம். அப்போது ஒருவர் பர்ஸ் ஒன்றை தவற விட்டுவிட்டார். உடனடியாக அவரை கூப்பிட்டோம். ஆனால் அவர் வேகமாக கவனிக்காமல் போய்விட்டார்..
அதற்குள் என்ன இருக்கிறது என்று பார்த்தோம்.. 6 தங்க மோதிரங்கள் இருக்கவும், யாரிடம் கொடுப்பது என யோசித்தோம். பிறகுதான் போலீஸில் ஒப்படைத்தோம்.
நாம் பிறரது பொருளை எடுக்க நேரிட்டால், நாளைக்கு நம்முடைய பொருள்களையும் தொலைக்க நேரிடும். அதனால், கவனமாக இருக்க வேண்டும். நாங்கள் இந்த பொருளை கண்டெடுக்கும் போது ஒரு வித பதற்றம் இருந்தது. உடனடியாக போலீசாரின் தீவிர முயற்சியில் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது மகிழ்ச்சியை தந்துள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications