மண்டைக்கேறிய மதுபோதை! அப்பாவை தூங்க விடாமல் தொல்லை! மகனுக்கு ஒரே அடி! திணறிப் போன தூத்துக்குடி!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே, குடிபோதையில் தந்தையிடம் தகராறு செய்த மகனை, அரிவாளால் தந்தை வெட்டி படுகொலை செய்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பெற்ற மகனை கொன்றுவிட்டு தப்பியோடிய தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுவுக்கு அடிமையாகும் சில இளைஞர்கள், தங்களது வாழ்க்கையை அழித்துக்கொண்டு, தங்களது குடும்பத்திற்கும் மறைமுகமாகவும், நேரடியாகவும் தொந்தரவு செய்து வருகின்றனர்.
மதுபோதையில், என்ன செய்கிறோம் என்று தெரியாமல் அவர்கள் எடுக்கும் சில விபரீத முடிவுகள், அவர்களுக்கே சில சமயங்களில் பாதகமாக முடிகிறது. அப்படியொரு சம்பவம், தூத்துக்குடி அருகே அரங்கேறியுள்ளது.
குடிபோதையில் கோவையை கதிகலக்கிய வடமாநில இளைஞர்... நடுரோட்டில் படுத்து கொண்டு பாரத் மாதா கி ஜே கோஷம்!
மதுவுக்கு அடிமையான மகன்
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே காட்டுராமன்பட்டியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி முத்துராஜ். இவருக்கு 3 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். இவரின் இளைய மகன் முத்துக்குமார் மதுவுக்கு அடிமையாகி, தினந்தோறும் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். இதனை வீட்டில் உள்ள குடும்பத்தினர் பலமுறை கண்டித்தும், முத்துக்குமார் அலட்சியம் செய்ததோடு, வீட்டில் உள்ளவர்களிடம் தகராறு செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார்.
தந்தையுடன் தகராறு
இந்நிலையில், வழக்கம்போல் நேற்று இரவும் முத்துக்குமார் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். முழுபோதையில் இருந்த முத்துக்குமார், வீட்டில் இருந்த தனது தந்தை முத்துராஜிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தந்தையிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட முத்துக்குமார், மதுபோதை தலைக்கேறி, திடீரென அரிவாளால் தந்தையை வெட்ட முயன்றுள்ளார்.
மகனை கொன்ற தந்தை
பெற்ற மகன், மதுபோதையில் தன்னை அரிவாளால் வெட்ட வருவதைக் கண்ட தந்தை முத்துராஜ் அதிர்ச்சியடைந்துள்ளார். எனினும், சுதாரித்துக் கொண்ட அவர், வெட்ட வந்த முத்துராஜை கீழை தள்ளியுள்ளார். பின்னர் ஆத்திரத்தில் பெற்ற மகன் என்றும் பாராமல், முத்துக்குமார் வைத்திருந்தி அரிவாளை பிடிங்கி, மகனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார் தந்தை முத்துராஜ். இதில், முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவலின் பேரில், கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஷ், நாலாட்டின்புத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் சுகாதேவி, துணை ஆய்வாளர் ஆர்தர்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் படுகொலை செய்யப்பட்ட முத்துக்குமாரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தந்தைக்கு போலீசார் வலை வீச்சு
மேலும், இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக, நாலாட்டின்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட பெற்ற மகனை வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடிய தந்தை முத்துராஜை, போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மதுபோதையில் தகராறு செய்த மகனை, ஆத்திரத்தில் தந்தையை வெட்டி படுகொலை செய்த சம்பவம், காட்டுராமன்பட்டி கிராமத்தில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.