அதுவா திராவிட கட்சி? எந்தக் காலத்திலும் இல்ல.. யாரோட கைகோர்த்திருக்காங்கனு பாருங்க.. கனிமொழி பொளேர்!
தூத்துக்குடி : திராவிட இயக்கம் என்று சொல்லிக் கொள்ளும் அதிமுக இன்றைக்கு திராவிட இயக்கமாக இல்லை, எந்தக் காலத்திலும் இருந்தது இல்லை என்று திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி விமர்சித்துள்ளார்.
எல்லாவற்றிலும் நுழைவுத் தேர்வை நுழைத்துக் கொண்டிருக்கும் பாஜகவுடன் அதிமுக கை கோர்த்துக் கொண்டிருக்கிறது என்று கனிமொழி எம்.பி விமர்சித்துள்ளார்.
திமுகவை வீழ்த்த யாராலும் முடியாது என திருச்செந்தூரில் நடந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் கனிமொழி எம்பி பேசியுள்ளார்.

கனிமொழி பேச்சு
திமுகவின் திருச்செந்தூர் ஒன்றிய, நகர, பேரூர் கழக செயல்வீரர்கள் கூட்டம் திருச்செந்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திமுகவை வீழ்த்த யாராலும் முடியாது
இந்தக் கூட்டத்தில் பேசிய கனிமொழி எம்.பி, "வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்ட வெற்றி. திமுகவை வீழ்த்த திமுகவை தவிர வேறு யாராலும் முடியாது. திமுகவை எதிர்த்து வெற்றி பெற யாராலும் முடியாது. நமக்குள்ளே கருத்து வேறுபாடுகள், பிரிவினைகள், பிரச்சனைகள், சச்சரவுகள் வந்துவிடக் கூடாது. அதனைப் புரிந்து கொண்டு தேர்தல் நாம் செயல்பட வேண்டும்" எனத் தெரிவித்தார்.

அதிமுக திராவிட இயக்கமா?
மேலும் பேசிய கனிமொழி, "நமது குடும்பத்திற்குள் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும். கட்சிக்குள் ஆண், பெண் வித்தியாசம் கூட வந்து விடக்கூடாது என்பதற்காக அனைவரையும் தன் உடன்பிறப்புகள் என்று அழைத்தவர் கருணாநிதி. தமிழ்நாட்டைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் திமுக. அத்துடன், திராவிட இயக்கம் என்று சொல்லிக் கொள்ளும் அதிமுக இன்றைக்கு திராவிட இயக்கமாக இல்லை. எந்தக் காலத்திலும் இருந்தது இல்லை.

பாஜகவுடன் கைகோர்த்து
நமது வீட்டுப் பிள்ளைகள் படிக்கக் கூடாது, கல்லூரிகளுக்கு செல்லக்கூடாது, மருத்துவர் ஆகக் கூடாது, நல்ல நிலைமைக்கு வரக்கூடாது என்று எல்லாவற்றிலும் நுழைவுத் தேர்வை கொண்டு வந்து நுழைத்துக்கொண்டு இருக்கக்கூடிய பாஜகவுடன் அதிமுக கைகோர்த்துள்ளது. அதனால் தமிழ்நாட்டை காப்பாற்றக் கூடிய கடமை, கடப்பாடு, திமுகவில் உள்ள ஒவ்வொருவருக்கும் உள்ளது.

மேடை போட்டு பொய்கள்
தமிழ்நாட்டைக் காக்க நாம் அத்தனை பேரும் ஒற்றுமையாக நின்று தேர்தலை சந்திக்க வேண்டும். இயக்கத்தை பாதுகாக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்பார்க்கிறார். நம்மை எதிர்த்து விடலாம் வீழ்த்தி விடலாம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்கள், திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என ஒவ்வொரு முறையும் பல பொய்களை சமூக வலைதளங்களிலும், மேடை போட்டும் சொல்லி வருகிறார்கள்" எனப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications