கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையா? அசால்ட் அதிகாரிகளால் கண்ணீர் வடிக்கும் விவசாயி! 6 ஏக்கர் வாழை நாசம்!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே, பொதுப்பணித்துறையினரின் அலட்சியத்தால், சுமார் 6 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் தீயில் எரிந்து சேதமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே நடுநாலுமூலைக்கிணறு பத்துக்கண் பாலம் அருகே, அதே பகுதியைச் சேர்ந்த கண்ணதாசன் என்பவர், சுமார் 6 ஏக்கர் நிலப்பரப்பளவில் வாழை பயிரிட்டிருந்தார்.
இந்தத் தோட்டத்தில், செவ்வாழை, கற்பூரவள்ளி உள்ளிட்ட பல வகையான வாழை ரகங்களை விவசாயம் செய்து வருகிறார்.

அதிகாரிகள் அலட்சியம்
இந்நிலையில், பத்துக்கண் பாலம் வாய்க்கால் ஓடைகளில் தண்ணீர் செல்வதற்கு தடையாக உள்ள முட்செடிகளை அகற்றும் பணி நடைபெற்றுள்ளது. இந்தப் பணியில் ஈடுபட்ட பொதுப்பணித்துறையினர், ஓடைகளில் உள்ள முட்செடிகளை அகற்றி, அதற்கு தீ வைத்த எரித்துள்ளனர். பின்னர் தீயை அணைக்காமல் பணிமுடிந்து பொதுப்பணித்துறையினர் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

வாழைத் தோட்டத்தில் பற்றிய தீ
முட்செடிகளில் வைக்கப்பட்ட தீயை அணைக்காமல் சென்றதால், பலத்த காற்று காரணமாக, தீ அருகேயுள்ள வாழைத் தோட்டத்தின் வேலியில் பற்றியது. மளமளவென பற்றிய தீ, வேகமாக பல்வேறு இடங்களுக்கும் வேகமாக பரவரத் தொடங்கியது. தோட்டத்தில் உள்ள வாழை மரங்களிலும் தீ பற்றி கொளுந்துவிட்டு எரிந்தது. காற்றின் வேகம் காரணமாக தீ அடுத்தடுத்துள்ள வாழை மரங்களுக்கு பற்றியதால், 6 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த 7000 வாழை மரங்கள், முற்றிலும் தீயில் எரிந்து கருகின.

போராடி தீ அணைப்பு
இதுகுறித்து திருச்செந்தூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின்பேரில் சம்பவ பகுதிக்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினருடன், அருகேயுள்ள ஆறுமுகநேரியில் உள்ள தனியார் தொழிற்சாலை தீயணைப்பு வீரர்களும், அப்பகுதி பொதுமக்களும் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேரம் கடுமையாக போராடி வாழை மரத்தில் பற்றிய தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

ரூ.4 லட்சம் நஷ்டம் - விவசாயி கவலை
பொதுப்பணித்துறையினரின் அலட்சியத்தால் ஏற்பட்ட இந்த தீ விபத்து சம்பவத்தால், சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான வாழைகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. வாழை சாகுபடிக்காக காத்திருந்த விவசாயி கண்ணதாசன், இந்த சம்பவத்தால் கவலையில் உறைந்துள்ளார். இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக, திருச்செந்தூர் தாலுகா காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications