“பவர்” போர்.. கீதா ஜீவன் VS சசிகலா புஷ்பா! வீட்டை தாக்கியதாக தூத்துக்குடி திமுகவினர் மீது வழக்கு
தூத்துக்குடி: பாஜக மாநிலத் துணைத் தலைவரும், முன்னாள் அதிமுக மாநிலங்களவை உறுப்பினருமான சசிகலா புஷ்பா வீடு மற்றும் கார் மீது தாக்குதல் நடத்திய புகாரில் திமுகவை சேர்ந்த 3 மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட 13 பேர் மீது சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
தூத்துக்குடி ஆண்டாள் தெருவில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பாஜக மூத்த தலைவர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டார்கள்.
இதில் பாஜக சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற குழு தலைவருமான நயினார் நாகேந்திரன், மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா, மாநில பொதுச் செயலாளர் பொன் பால கணபதி உள்ளிட்டோர் பங்கேற்ரு பேசினர்.
பாஜக வளர்ச்சியை பார்த்து பயமா இருக்கா? உங்க உருட்டல் மிரட்டலுக்கெல்லாம் அஞ்சமாட்டோம்.. சீறிய பாஜக!
சசிகலா புஷ்பா பேச்சு
இதில் உரையாற்றிய சசிகலா புஷ்பா, "ஒன்றரை வருடம் திமுக ஆட்சியில் ஒன்றும் செய்யவில்லை. சுய புராணம் பாட தகுதி உள்ளவர் அண்ணாமலை. ஆகவே, அவரை புகழ்கிறோம். முழு தகுதி பெற்றவர் அவர், பாஜக தலைவர் அண்ணாமலை எந்த கோர்ட் வாசலிலும் சொத்து குவிப்பு வழக்கிற்காக நிற்கவில்லை. குற்றவாளிகளை கொண்டுபோய் நிறுத்திதான் பழக்கம், குற்றவாளியாய் நின்று அவருக்கு பழக்கம் இல்லை.
கீதா ஜீவனுக்கு மிரட்டல்
அண்ணாமலை மேடையில் ஏறும் போது நாங்கள் மேடையில் ஏறுவோம் என தூத்துக்குடியில் நடந்த பொது கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார். நீங்கள் வீட்டில் இருந்து வெளியே வரும் போது கால் இருக்காது. நாக்கு இருக்காது. நிங்கள் செய்யும் ஊழலை பற்றி சொல்வோம். சமூக நலத்துறை அமைச்சராய் இருந்து சமூகத்தை பேணவில்லை. நாகரிக அரசியல் செய்ய வேண்டும். தெற்கத்தி பெண்களுக்கு அசிங்கத்தை ஏற்படுத்தி வருகிறீர்கள்.
டிஜிபி அலுவலகத்தில் புகார்
கீதாஜீவன் அமைச்சராக இருக்கும் போது இங்கு திமுக தோற்க போகிறது. பிஜேபி வெற்றி பெற போகிறது." என்றார். சசிகலா புஷ்பாவின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து அமைச்சர் கீதா ஜீவனை இழிவுபடுத்தி பேசியதற்காக சசிகலா புஷ்பாவை கைது செய்ய வேண்டும் என டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
வீட்டின் மீது தாக்குதல்
இந்நிலையில் நேற்று சசிகலா புஷ்பா நாகர்கோவில் சென்ற நிலையில் தூத்துக்குடி தபால் தந்தி காலனி 8 வது தெருவில் உள்ள அவரது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அவரது வீட்டை பெண்கள் உட்பட பல தாக்கி சேதப்படுத்தியதுடன் காரின் கண்ணாடியை உடைத்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
காவல்நிலையத்தில் புகார்
இது தொடர்பாக தூத்துக்குடி பாஜக பிரச்சார பிரிவு தெற்கு மாவட்ட செயலாளர் ரத்தினராஜ் என்ற கனி என்பவர் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், சசிகலா புஷ்பா வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதலில் மட்டும் ரூ.2.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்ததாக அவர் குறிப்பிட்டு இருந்தார்.
திமுக கவுன்சிலர்கள் மீது வழக்கு
"டுவிபுரம் மாநகராட்சி 30 வது வார்டு திமுக பெண் மாமன்ற உறுப்பினர் அதிர்ஷ்டமணி மற்றும் அவரது கணவர் ரவீந்திரன், லெவஞ்சிபுரத்தைச் சார்ந்த 45 வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன்,30 வது வார்டு மாமன்ற உறுப்பினர் இசக்கி ராஜா உட்பட 9 பெண்கள் 2 ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்து பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பாவின் தாக்குதல் நடத்தினர்." என அவர் குறிப்பிட்டார். அதன் அடிப்படையில் 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.