நல்லது செய்திருந்தால்.. பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்தியிருப்போம்.. கனிமொழி பலே பேச்சு
ஒட்டப்பிடாரம்: மக்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருப்பதாக முதலமைச்சர் பழனிசாமி பட்டியலிட்டால், அவருக்கு திமுக சார்பில் பாராட்டு விழா நடத்தியிருப்போம் என்று திமுக எம்.பி கனிமொழி கூறியுள்ளார்.
அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டபிடாரம், சூலூர் ஆகிய 4 தொகுதிகளில் மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், வேட்பாளர்கள் மற்றும் கட்சியினரின் பிரச்சாரம் அனல் பறந்து வருகிறது.
தமிழகத்தில் ஆட்சியை தீர்மானிக்கும் தேர்தலாக இந்த இடைத்தேர்தல் இருக்கும் என்பதால், வீதி,வீதியாக சென்று மக்களை நேரடியாக சந்தித்து ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கூட்டு குடிநீர் திட்டம்
இந்நிலையில், ஒட்டப்பிடாரம் தொகுதி திமுக வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து தெய்வசெயல்புரம், செக்காரகுடி, சவலாப்பேரி, உள்ளிட்ட பகுதிகளில் கனிமொழி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ஒட்டப்பிடாரம் தொகுதியில் திமுக கொண்டுவந்த கூட்டு குடிநீர் திட்டத்தை அதிமுக அரசுதான் தடுத்து நிறுத்தியதாக குற்றம்சாட்டினார்.

முரண்பட்ட கூட்டணி
மேலும், நீட் தேர்வை எதிர்க்கும் அதிமுகவும், நீட் தேர்வை ஆதரிக்கும் பாஜகவும் இணைந்து முரண்பட்ட கூட்டணியை அமைத்துள்ளதாகவும் கனிமொழி விமர்சித்தார்.

பாராட்டு விழா
தமிழகத்தில் தற்போது நடைபெறும் ஆட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும், அதை பற்றி அரசு கவலைப்படுவதில்லை என்றும் கூறினார். இந்த ஆட்சியில் மக்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருப்பதாக முதலமைச்சர் பட்டியலிட்டால், அவருக்கு திமுக சார்பில் பாராட்டு விழா நடத்தியிருப்போம் எனவும் கனிமொழி கூறினார்.

நிரந்தர முதலமைச்சர்
முன்னதாக, வருகிற 23-ந் தேதிக்கு பின்னர் ஸ்டாலின் தான் தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சாராக வருவார். அதற்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி, தாம் முதலமைச்சர் ஆகுவோம் என்று கனவு கூட காணமுடியாது என்றார். மேலும், ஸ்டாலினை விமர்சிக்கும் தகுதி எடப்பாடி பழனிச்சாமிக்கோ, அ.தி.மு.க.வினருக்கோ இல்லை என்றும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications