ரப்பர் ஸ்டாம்ப்..அருகதை இருக்கா? பாஜகவிற்கு பயம்..எல் முருகனுக்கு பதிலடி கொடுத்த கனிமொழி
தூத்துக்குடி: தமிழக முதல்வர் பற்றி தகுதியும் அருகதை உள்ளவர்கள் மட்டும்தான் பேச வேண்டும் என்று ரப்பர் ஸ்டாம்ப் முதல்வராக மு.க. ஸ்டாலின் செயல்படுகிறார் என்று எல்.முருகன் கூறிய கருத்து கனிமொழி எம்.பி பதிலடி கொடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் ராமர் ஜோதி ஊர்வலத்தில் பங்கேற்ற மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முதல்வர் ஸ்டாலின் இன்றைக்கு அவருடைய அமைச்சர்களை, அவருடைய கட்சியின் மாவட்ட செயலாளர்களை, அவர்களுடைய எம்எல்ஏக்களை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலையில் தவித்துக் கொண்டிருக்கிறார். அவரை தூங்க விடுவதில்லை என்றார்.
அவர்களால் அவருக்கு உடல் நலம் குறைவடைகிறது. அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் ஒரு கட்சித் தலைவர் சொல்லக்கூடியதை கேட்க முடியாத சூழ்நிலைதான் தற்போது தமிழ்நாட்டில் நிலை வருகிறது.

ரப்பர் ஸ்டாம்ப் முதல்வர்
தமிழ்நாட்டில் ஒரு காட்டாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அவர்களை கட்டுப்படுத்த முடியாத ஒரு ரப்பர் ஸ்டாம்ப் முதல்வராக ஸ்டாலின் இருந்து வருகிறார் என்று குற்றம்சாட்டினார். எல்.முருகனின் பேச்சு தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் கனிமொழி எம்.பி அதற்கு பதிலடி தரும் வகையில் பேசியுள்ளார். தமிழக முதல்வர் எப்படி செயல்படுகிறார் என்று சொல்லக்கூடிய தகுதியும் அருகதையும் இருக்கக்கூடியவர்கள் இதை சொல்ல வேண்டும் என்று காட்டமாக கூறியுள்ளார்.

துணை பொதுச்செயலாளர் கனிமொழி
திமுக துணை பொதுச்செயலாளராக கனிமொழி பதவி ஏற்ற பின்னர் முதல் முறையாக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். அவருக்கு தெற்கு மாவட்ட திமுக சார்பில் மீன் வளம் மற்றும் மீனவர் நலம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

உற்சாக வரவேற்பு
பின்னர், சமூக நலத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கீதா ஜீவன் தலைமையில் 3ம் மைல் பகுதியில் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் கனி மொழிக்கு வாழ்த்து தெரிவித்து, திமுக நிர்வாகிகள் தொண்டர்கள், மகளிர் அமைப்பினர் சால்வை மற்றும் பூங்கோத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

இந்தி திணிக்கக் கூடாது
பின்னர், திமுக துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதிதி
செய்தியாளர்களிடம் கூறுகையில், திமுக இயக்கம், திமுக தலைவர் நம்பிக்கை வைத்து பொறுப்பு அளித்திருக்கிறார். அவர் நம்பிக்கைக்கு பாத்திரமாக, எதிர்பார்புகளை ஈடு செய்யும் அளவிற்கு பணி செய்வேன்.
இந்தியா என்பது பல்வேறு மாநிலம், வாழ்க்கை, மொழி முறை கொண்டது. அனைவரும் இந்தி பேச வேண்டும் என திணிக்க கூடாது என்றார்.

கனிமொழி பதிலடி
தமிழக முதல்வர் ரப்பர் ஸ்டாம்ப் முதல்வராக செயல்படுகிறார் என்று எல்.முருகன் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், தமிழக முதல்வர் எப்படி செயல்படுகிறார் என்று சொல்லக்கூடிய தகுதியும் அருகதையும் இருக்கக்கூடியவர்கள் இதை சொல்ல வேண்டும் என்று பதிலடி கொடுத்தார்.

தமிழக ஆட்சி மீது பயம்
தமிழ்நாடு மட்டுமல்ல, உலகம் முழுவதும் இருக்கக்கூடிய அரசியல் அதிகாரத்தில் அதுவும் அரசாங்கம் எப்படி நடத்த வேண்டும் என்பதை பார்க்கக் கூடிய ஆர்வம் இருக்கக்கூடியவர் அத்தனை பேரும் தமிழகம் முதல்வரை முன்வைக்கக்கூடிய திராவிட மாடல் ஆட்சியை உதாரணமாக எடுத்து பேச கூடிய அளவிற்கு ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். இந்தியாவே திரும்பி பார்க்கக் கூடிய அளவிற்கு ஆட்சி நடத்தி வருகிறார். அவர்களுக்கு தமிழக ஆட்சி மீது பயமாக இருக்கலாம் ஆகவே திரும்ப திரும்ப சொல்லி கொண்டு இருக்கலாம் என்றார்.

மொழி பிரச்சினை
இந்தி பிரச்சனையை மறுபடியும், மறுபடியும் கொண்டு வருவது மத்திய அரசு தான், மத்திய அரசு செயல்படாமல் இருப்பதை திசை திருப்பதற்காக தான் என்று நமக்கு தோன்றுகிறது. தேவையே இல்லாமல் மொழி பிரச்சினையை மறுபடியும் மறுபடியும் கொண்டு வருகிறார்கள். முதலில், கமிஷன் ரிப்போர்ட் மத்திய அரசு தான் வெளியிடுகிறார்கள். இவர்கள் செய்யாமல் இருந்திருந்தால் முதல்வர் எதிர் வினை தர வேண்டிய அவசியம் இருந்திருக்காது என கூறினார்.












Click it and Unblock the Notifications