வங்கக்கடலுக்கு இணையான மக்கள் திரள்.. “பல தலை” அரக்கனை அழித்த "தேவி".. களைகட்டிய குலசை சூரசம்ஹாரம்
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினத்தில் தசரா திருவிழாவை காண 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கடற்கரையில் திரண்டுள்ள நிலையில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்காரம் நள்ளிரவு நடைபெற்றது. எருமை, கோழி, சேவல் என பல அவதாரங்கள் வந்த அசுரனை தேவி சூலாயுதத்தால் வதம் செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் கோவில். இங்கு ஆண்டுதோறும் தசரா திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக திருவிழா மிகுந்த கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது. தற்போது கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தபட்டு திருவிழா நடைபெற்றது.
குலசை தசரா கோலாகலம்... காளி வேடமிட்டு ஆக்ரோஷமாக ஆடும் பக்தர்கள்..நள்ளிரவில் சூரசம்ஹாரம்
மைசூருக்கு அடுத்த இடம்
கர்நாடகா மாநிலம் மைசூரில் நடைபெறும் உலகப் புகழ் பெற்ற தசரா திருவிழாவுக்கு அடுத்தபடியாக இங்கு நடைபெறும் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 26-ம் தேதி பக்தர்கள் பங்கேற்கும் விதமாக தசரா திருவிழாவின் கொடியேற்றம் நடைபெற்றது.
தென் மாவட்டங்கள்
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விரதத்தை மேற்கொள்ள காப்பு கட்டிகொண்டனர். ஆண்டுதோறும் தசரா திருவிழாவில் தூத்துக்குடி மாவட்டம் மட்டுமல்லாது நெல்லை, தென்காசி உட்பட ஏராளமான மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் மாலை அணிந்து காப்புகட்டி விரதமிருந்து கோவிலுக்கு வருவது வழக்கம்.
பல வேடங்கள்
அவர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் விநாயகர், முருகன், சிவன், பார்வதி, மீனாட்சி, காளி, சுடலைமாடன் உள்ளிட்ட தெய்வ வேடங்களிலும், காவல் அதிகாரி, செவிலியர், நீதிபதி உள்ளிட்ட பல்வேறு வேடங்களை போட்டுக்கொண்டு ஊர் ஊராக சென்று மக்களிடம் காணிக்கை பெற்று தசரா விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரத்தின் போது குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு செல்வது வழக்கம்.
சூரசம்ஹாரம் நிகழ்ச்சி
அதன்படி இந்த ஆண்டும் ஏராளமான இடங்களில் பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை தொடங்கினர். 10 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற இந்த தசரா திருவிழாவின் முக்கிய நாளான இன்று (புதன்கிழமை) நள்ளிரவு கடற்கரையில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக 2,100 போலீசார் குவிக்கப்பட்டனர்.
தீபாராதனை
சூரசம்ஹாரத்தை முன்னிட்டு இன்று காலை முதல் மதியம் வரை சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இரவு 11 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. இரவு 12 மணி அளவில் அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு முன்பாக எழுந்தருளினார்.
மகிஷாசூரன் வதம்
அப்போது காளி வேடம் அணிந்த திரளான பக்தர்களும் அம்மனை பின்தொடர்ந்து ஆடியபடி சென்றனர். அங்கு எருமை, கோழி, சேவல் என பல அவதாரங்களில் வந்த மகிஷாசூரனின் தலையை முத்தாரம்மன் சூலாயுதத்தால் சம்ஹாரம் செய்தார். இதனை கண்ட பக்தர்கள் ஓம் சக்தி, அதி பராசக்தி என்று முழக்கமிட்டனர். இதனை தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை சிறப்பு பாலபிஷேகத்துடன் குலசை தசரா திருவிழா நிறைவடைகிறது.