ஸ்டெர்லைட் ஆலையை திறங்க... வாழ்வாதாரம் போச்சு... தொழிலாளர்கள் குமுறல்
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி முத்து கிருஷ்ணாபுரம் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
ஸ்டெர்லைட் ஆலை நச்சு கழிவுகளை வெளியேற்றுவதாகவும், இந்த ஆலை வெளியிடும் புகையால் புற்றுநோய் பரவுவதாகவும் கூறி தூத்துக்குடியில் கடந்த ஆண்டு மிகப்பெரிய போராட்டம் நடந்தது.
அந்த போராட்டத்தில் 13 பேர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதையடுத்து அசாதாரண நிலை ஏற்பட்டதால், தமிழக
அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டது
மக்கள் குறைதீர்ப்பு கூட்டம்
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை இயக்காததால் அதை நம்பி இருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிக்கை எழுந்துள்ளது.தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடந்தது.
வாழ்வாதாரம் பாதிப்பு
அப்போது, முத்து கிருஷ்ணபுரம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என
மனு அளித்தனர். கிராம மக்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் ஆயிரக்கணக்கானோர் வேலை இல்லாமல் தவித்து வருவதாகவும், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
வதந்தி பரப்பபடுகிறது
மேலும், ஸ்டெர்லைட் ஆலையால் தங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றும், அந்நிய சக்தியின் கைகூலிகள் சிலர், ஸ்டெர்லைட் ஆலை குறித்து வதந்தி பரப்பி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.ஸ்டெர்லைட் ஆலையை நம்பி தூத்துக்குடியில் பல சிறிய தொழிற்சாலைகள் இயங்கிய நிலையில், தற்போது ஆலை மூடப்பட்டதால் போதிய மூலப்பொருட்கள் கிடைக்காமல் அந்த ஆலைகளும் மூடப்பட்டிருப்பதாக மனுவில் தெரிவித்துள்ளனர்.
கிராம மக்கள் கோரிக்கை
ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் செய்யக் கூடிய நலத் திட்டங்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்றும், எனவே ஆலை மீண்டும் இயங்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் அனுமதிக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.