அப்பா குருபூஜைக்கு ஆரவாரமாக வாங்க! யாரும் குடிச்சுட்டு வராதீங்க! பசுபதி பாண்டியன் மகள் கறார்!
தூத்துக்குடி: பசுபதி பாண்டியன் நினைவு தினமான ஜனவரி 10ஆம் தேதி அன்று அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வருவோர் குடித்து விட்டு வரக்கூடாது என சந்தன பிரியா பசுபதி பாண்டியன் கறார் கண்டிஷன் போட்டுள்ளார்.
தனது தந்தை பசுபதி பாண்டியன் நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் ஆரவாரமாக வரலாம் ஆனால் அதே வேளையில் யாரும் தயவு செய்து மது அருந்திவிட்டு வர வேண்டாம் என்றும் 10 பேர் அஞ்சலி செலுத்த வந்தால் கூட பரவாயில்லை மது அருந்தாதவர்களாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை போட்டுள்ளார். தேவேந்திர குல வேளாளர் அமைப்பினருக்கு பசுபதி பாண்டியன் மகன் சந்தன ப்ரியா விதித்துள்ள இந்த நிபந்தனை சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்றுள்ளது.

பெருமைக்காக கூட்டம் வராவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் யாரும் குடித்து விட்டு வரக் கூடாது என அவர் பேசியிருப்பது மது எதிர்ப்பு போராளிகள் மத்தியிலும் பாராட்டை பெற்றுள்ளது. பசுபதி பாண்டியனை பொறுத்தவரை திண்டுக்கல்லில் கொலை செய்யப்பட்டாலும் தூத்துக்குடி மாவட்டம் அலங்காரத் தட்டு கிராமத்தில் தான் அவரது நினைவிடம் அமைந்துள்ளது. அங்கு ஆண்டு தோறும் ஜனவரி 10ஆம் தேதி அன்று நினைவு நாள் அனுசரிக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்தாண்டு வரும் ஜனவரி 10ஆம் தேதி சந்தன பிரியா தலைமையில் பசுபதி பாண்டியன் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. தன் தந்தை நினைவு நாள் அஞ்சலி நிகழ்ச்சி தொடர்பாக தென் மாவட்டங்களில் பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து வரும் சந்தன ப்ரியா, மதுவுக்கு எதிராக பேசி தேவேந்திர குல வேளாளர் அமைப்பினர் குடிக்கக் கூடாது என அட்வைஸ் அளித்து வருகிறார்.
ஜனவரி 10, 2024 அன்று பசுபதி பாண்டியனின் 12ஆம் ஆண்டு நினைவு நாள் என்பதால் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. தலைமையில் 10 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், ஒரு காவல் உதவி கண்காணிப்பாளர், 20 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 60 காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications