ஈபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் மா.செ வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு.. நள்ளிரவில் ‘திடுக்’- 3 பேர் யார்?
தூத்துக்குடி : எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுக நயினார் தற்போது அதிமுக எம்.ஜி.ஆர் மன்ற மாநில இணைச் செயலாளராக உள்ளார்.
இவரது வீட்டில் நேற்று நள்ளிரவு அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிச் சென்றதாக கூறப்படுகிறது. மேலும் இவரது உறவினர் லட்சுமணன் என்பவர் வீட்டிலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி மத்தியபாகம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமிக்கு 'செக்’ வைக்கும் அஸ்திரம்.. 'கோடநாடு’.. போராட்டம் நடத்த ஓபிஎஸ் டீம் திட்டம்?
அதிமுக பிரமுகர் வீட்டில்
தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுக நயினார் மற்றும் அவரது உறவினர் லட்சுமணன் வீடுகளில் நேற்று நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிச் சென்ற சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் பெட்ரோல் குண்டு வீசும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெட்ரோல் குண்டு வீச்சு
தூத்துக்குடி டூவிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுக நயினார். அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளரான இவர் தற்போது அதிமுக எம்ஜிஆர் மன்ற மாநில இணைச்செயலாளராக உள்ளார். இவரது வீட்டில் நேற்று நள்ளிரவு இருசக்கர வானத்தில் வந்த அடையாளம் தெரியாத 3 மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றதாக கூறப்படுகிறது. மேலும் அதே தெருவில் உள்ள இவரது சகோதரர் ராமசாமியின் மகன் லட்சுமணன் வீட்டிலும் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர்.
காரில் தீப்பற்றியது
மர்ம நபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு, வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரின் மேல்பட்டு லேசாக தீப்பற்றி எரிந்துள்ளது. வீட்டிற்கு வெளியே கையெறி குண்டின் திரிகள் சிதறிக் கிடந்துள்ளது. இரவு நேரம் என்பதால் இது குறித்து அப்பகுதியில் யாருக்கும் தெரியவில்லை காலையில் இதுகுறித்து தகவல் வெளியானதும் சம்பவ இடத்திற்கு மத்திய பாகம் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
ஈபிஎஸ் ஆதரவாளர் வீட்டில்
அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் 3 நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து பெட்ரோல் வீசி இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து மத்திய பாகம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான அதிமுக பிரமுகர் ஒருவர் வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.