தூத்துக்குடியில் என்கவுண்டர்.. 18 வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடி சுட்டுக்கொலை.. என்ன நடந்தது?
தூத்துக்குடி: தூத்துக்குடியில் துரைமுருகன் என்ற பல்வேறு வழக்கில் தொடர்புடைய குற்றவாளி என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.
Recommended Video
18 வழக்குகளில் தொடர்புடைய துரைமுருகன் என்பவரை காவல்துறையினர் இன்று சுட்டுக் கொன்றனர். துரைமுருகன் பல்வேறு வழக்கில் தேடப்பட்டு வந்த நிலையில் இன்று போலீசார் இவரின் இருப்பிடத்தை அறிந்து கைது செய்ய சென்றதாக கூறப்படுகிறது.
முத்தையாபுரத்திற்கு அருகில் கடல் கரையோரத்தில் இவர் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. போலீசுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரை கைது செய்ய சம்பவ இடத்திற்கு போலீசார் டீம் சென்றுள்ளனர்.
மனைவி அமமுக வேட்பாளர்.. 'குட்டு' வாங்கிய 'என்கவுன்ட்டர்' ஸ்பெஷலிஸ்ட்.. இவருக்கா இந்த நிலை?
மோதல்
போலீசார் கைது செய்த போது துரைமுருகன் அங்கிருந்து தப்பி ஓட முயன்று இருக்கிறார். அவரை போலீசார் பிடித்த நிலையில் போலீசாருக்கும் துரைமுருகனுக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. துரைமுருகனிடம் பலத்த ஆயுதங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
வழக்கு
இதில் போலீசாரை துரைமுருகன் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. காவல் ஆய்வாளரை துரைமுருகன் கடுமையாக தாக்கியதாக முதல் கட்ட தகவல்கள் வருகின்றன. இதையடுத்து துரைமுருகனை போலீசார் தற்காப்பிற்காக சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது.
கொலை
இந்த மோதலில் முத்தையாபுரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட இடத்தில் துரைமுருகன் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் மீது கொலை, கொள்ளை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 18 வழக்குகள் நிலுவையில் உள்ளன. தூத்துக்குடி, திருநெல்வேலியில் துரைமுருகன் தேடப்பட்டு வந்த நிலையில் இன்று கொல்லப்பட்டுள்ளார்.
போலீஸ் என்கவுண்டர்
நெல்லையில் ஜெகதீசன் என்ற பூ வியாபாரியை கொலை செய்த வழக்கில் சமீபத்தில் துரைமுருகன் தேடப்பட்டு வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் நெல்லை அருகே ஜெகதீசனின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த கொலை வழக்கு உட்பட 5 கொலை வழக்குகள் துரைமுருகன் மீது நிலுவையில் இருந்த நிலையில் தற்போது என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர்
கடந்த சில நாட்களுக்கு முன்புதான் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் அருகே வட மாநில கொள்ளையர் ஒருவரை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர். போலீசாரை துப்பாக்கியால் சுட முயன்ற போது கொள்ளையரை போலீசார் என்கவுண்டர் செய்தனர். கொள்ளையன் ஜார்க்கண்டு மாநிலத்தைச் சேர்ந்தவர், இவரின் கூட்டாளியான இன்னொரு கொள்ளையன் போலீஸாரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த என்கவுண்டரை தொடர்ந்து சில நாட்களில் இன்னொரு என்கவுண்டர் தமிழ்நாட்டில் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.