நான் திருடல விட்ருங்க! ஸ்டேசனில் பெண்ணை அடித்து துன்புறுத்திய பெண் போலீஸ்! தூத்துக்குடி அதிர்ச்சி..!
தூத்துக்குடி : தூத்துக்குடியில் காவல் நிலையத்தில் பெண்ணை அடித்து துன்புறுத்திய விவகாரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 3 பெண் காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், தனிப்பிரிவு காவலர் ஒருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி, முத்தையாபுரம் கிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் தனுஷ்கோடி மகன் பிரபாகரன் என்பவரது வீட்டில் கடந்த 4ம் தேதி 10 பவுன் நகை மாயமானது.
இது தொடர்பாக அவர் முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். மேலும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த சண்முகம் மனைவி சுமதி (40) என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக புகாரில் தெரிவித்துள்ளார்.

பெண் மீது தாக்குதல்
இதையடுத்து கடந்த 7ம் தேதி பெண் காவலர்கள் மெர்சினா, கல்பனா, உமா மகேஸ்வரி ஆகிய மூவரும் சுமதியை முத்தையாபுரம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் அவர்கள் மூவரும் சுமதியை கடுமையாக அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

எஸ்பியிடம் புகார்
இதில் காயம் அடைந்த சுமதி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். மேலும் பெண் காவலர்கள் தன்னை துன்புறுத்தியதாக அவர் கடந்த 11ம் தேதி எஸ்பியிடம் மனு அளித்தார். இது தொடர்பாக விசாரணை நடத்த எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.

பணியிட மாற்றம்
விசாரணையில், புகார் குறித்து வழக்குப்பதிவு செய்யாமல் மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் பெண்ணை காவல் நிலையத்தில் வைத்து அடித்து துன்புறுத்தியது தெரியவந்தது. இதையடுத்து கடந்த 15ம் தேதி பெண் காவலர்கள் மூவரையும் தற்காலிக பணி நீக்கம் செய்தும், மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காத தனிப்பிரிவு காவலர் முருகன் என்பவரை ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்தும் எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடியில் அதிர்ச்சி
இதனிடையே இந்த விவகாரத்தில் தூத்துக்குடி எஸ்பி பரிந்துரையின் பேரில், முத்தையாபுரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முத்துமாலையை பணியிடை நீக்கம் செய்து நெல்லை சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளார். கடந்த சில நாட்களாக காவல் மரணங்கள் அதிகரித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், பெண்ணை காவல்நிலையத்தில் வைத்து தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications