பழம் சாப்பிட்ட மயில்! சசிகலாவின் திருச்செந்தூர் செண்டிமென்ட்! ஓ.பி.எஸ். தம்பியின் பயண ரூட் பின்னணி!
தூத்துக்குடி: ஆன்மிகப் பயணமாக தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள சசிகலா, விஜயாபதி விஸ்வாமித்ரர் ஆலயத்தில் நடந்த ஒரு நிகழ்வால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறாராம்.
தனது கையால் கொடுக்கப்பட்ட பழத்தை அந்த ஆலயத்தில் இருந்த மயில் விரும்பி சாப்பிட்டதால் முருகனின் அருள் ஆசியை பரிபூரணமாக பெற்றதை போல் உணர்ந்து அகமகிழ்ந்திருக்கிறார்.
இதனிடையே தனது 2 நாள் ஆன்மிக சுற்றுப்பயணத்தை முடித்த பிறகு சென்னையில் வைத்து ஓ.பி.எஸ். தம்பி ராஜாவை சசிகலா சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், செண்டிமென்ட் கருதி அவரை முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கே வரவழைத்து சந்தித்திருக்கிறார்.

சசிகலா பயணம்
நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் வழிபாடு நடத்த வேண்டி கடந்த 2 நாட்களாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார் சசிகலா. நேற்று திருச்செந்தூர் கோவிலுக்கு செல்வதற்கு முன்னர் விஜயாபதி விஸ்வாமித்ரர் கோவிலில் வழிபாடு நடத்திவிட்டு வெளியே வரும் போது அங்கிருந்த மயில் ஒன்றுக்கு வாழைப்பழத்தை கொடுத்திருக்கிறார் சசிகலா. மயில் அதனை சாப்பிடுமா சாப்பிடாதா என்ற ஐயத்திலேயே அவர் இருந்த போது, சசிகலா கையால் கொடுக்கப்பட்ட பழத்தை மயில் கொத்தி சாப்பிட்டிருக்கிறது.

முருகனின் ஆசி
இதனால் மிகுந்த உற்சாகமும், மகிழ்ச்சியும் அடைந்த சசிகலா முருகனின் அருள் ஆசி தனக்கு கிடைத்துவிட்டதை போல் உணர்ந்து இது குறித்து தன்னுடன் சென்ற இளவரசி மற்றும் விவேக் ஜெயராமனிடம் சிலாகித்து கூறியிருக்கிறார். இந்நிலையில் சசிகலா ஆன்மிகப் பயணமாக சென்றுள்ளதால் அந்தப் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பியதும் அவரை சந்திக்க ஓ.பி.எஸ். தம்பி ஓ.ராஜா தரப்பில் நேரம் கேட்கப்பட்டிருக்கிறது.

சசிகலாவுக்கு அழைப்பு
இதையடுத்து என்ன நினைத்தாரோ சசிகலா முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் வைத்து ஓ.ராஜாவை சந்திப்பது என முடிவெடுத்து திருச்செந்தூருக்கு வருமாறு அழைப்பு சென்றிருக்கிறது. இதையடுத்து அடித்து பிடித்து திருச்செந்தூர் சென்ற ஓ.ராஜா, அங்குள்ள சரவண பவன் விடுதியில் (சென்னை சரவண பவன் குழுமம் அல்ல, அது வேறு நிறுவனம்) சசிகலாவை 25 நிமிடம் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது சசிகலாவை தேனி மாவட்டத்திற்கு வருகை தருமாறு அழைப்பும் விடுத்திருக்கிறார் ஓ.ராஜா.
Recommended Video

முக்கியப் பிரமுகர்கள்
மேலும், தேனி அதிமுக மாவட்டச் செயலாளர் சையது கான் பற்ற வைத்த தீ சிவகங்கை, விருதுநகர், நீலகிரி, தூத்துக்குடி என பல மாவட்டங்களில் பற்றி வருவதும் குறித்தும் பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று மாலையோ அல்லது நாளையோ சசிகலா சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் திங்கள்கிழமைக்கு மேல் மேலும் சில முக்கியப் பிரமுகர்கள் அவரை நேரில் சந்திப்பார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications