"என் சாவுக்கு காரணம் 4 பேர்".. மாணவன் எழுதி வைத்த தற்கொலை கடிதம்.. 4 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்!
தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே பள்ளியில் ஆசிரியர் அடித்ததால் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனது மரணத்துக்கு 4 ஆசிரியர்கள் தான் காரணம் என மாணவன் தன் கைப்பட கடிதம் எழுதி வைத்திருந்தது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள பரமன்குறிச்சியில் அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவர் முத்துக்கிருஷ்ணன். பள்ளியில் ஆசிரியர்கள் நேற்று மாணவன் முத்துகிருஷ்ணனை அடித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், முத்துக்கிருஷ்ணன் வீட்டுப்பாடம் எழுதி வராததால் ஆசிரியர்கள் திட்டியதன் காரணமாக மனம் உடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவன் எழுதிய கடிதத்தில், தனது இறப்புக்கு பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியருடன் சேர்ந்து மொத்தம் நான்கு ஆசிரியர்கள் காரணம் என கூறியுள்ளார்.
என் சாவுக்கு ஆசிரியர்கள் பியூலா, மேரி, வளர்மதி மற்றும் தலைமை ஆசிரியர் ஆகிய 4 பேர் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு நேற்று இரவு 8 எட்டு மணியளவில் மாணவன் முத்துக்கிருஷ்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், திருச்செந்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயிரிழந்த மாணவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பழங்குடியின காட்டு நாயக்கன் வகுப்பை சார்ந்த தங்களுக்கு சாதி சான்றிதழ் இல்லாததாலும், சாதி சான்றிதழ் கொடுக்க அதிகாரிகள் அலைக்கழித்த நிலையில் பள்ளியில் சாதிச் சான்றிதழ் கேட்டு கொடுக்க முடியாததால் ஆசிரியர்கள் திட்டியதால் மனமுடைந்து முத்துகிருஷ்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக மாணவனின் பெற்றோர் குற்றம்சாட்டி உள்ளனர்.
இந்நிலையில், மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக பரமன்குறிச்சி அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் வளர்மதி, பியூலா, மேரி, தலைமையாசிரியர் சத்யா (எ) ஞானசுந்தரி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட கல்வி அலுவலர் கண்ணன் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்திய நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications