கோவில்பட்டி ரயில் நிலையத்தில் கடலை மிட்டாய் விற்பனை..செம டேஸ்ட் - உற்சாகத்தில் பயணிகள்
கோவில்பட்டி ரயில் நிலையத்தில் ஒரு நிலையம் ஒரு பொருள் விற்பனை திட்டத்தில் கடலை மிட்டாய் விற்பனை செய்யப்பட்டது.
தூத்துக்குடி: ஒரு நிலையம் ஒரு பொருள் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் புவிசார் குறியீடு பெற்ற கடலைமிட்டாய் விற்பனை நிலையம் துவங்கப்பட்டது. மத்திய, மாநில அரசுகளில் தொடர் ஊக்கத்தினை தொடர்ந்து கோவில்பட்டி கடலை மிட்டாய் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மதுரை ரயில்வே கோட்டத்தில் ஒரு நிலையம் ஒரு பொருள் விற்பனை திட்டத்தின் கீழ் மதுரை,நெல்லை போன்ற ரயில் நிலையங்களில் அந்தந்த பகுதியில் உள்ள பிரதான பொருட்கள் விற்பனை திட்டம் அளிக்கப்பட்டிருந்தது இந்த திட்டம் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.
இந்த திட்டத்தை விரிவுபடுத்தும் விதமாக மதுரை ரயில்வே கோட்டத்தில் உள்ள 30 ரயில்வே நிலையங்களில் அந்தந்த பகுதியில் உள்ள பிரதான பொருட்களை விற்பதற்கு விருப்பம் கூறப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் எந்த கட்டணமும் செலுத்தாமல் 15 நாட்கள் அந்தந்த ஊர்களின் பிரதான பொருட்களை விற்பனை செய்து கொள்ளலாம் பதிவு பெற்ற சுய உதவி குழுக்கள் மற்றும் அரசு அனுமதியுடன் பொருட்கள் தயாரிக்கும் அனைவரும் கலந்து கொள்ளலாம் இதன் மூலம் பயணிகள் அந்தந்த ரயில் நிலையங்களில் அப்பகுதியில் பிரபலமான பொருட்களை எளிதில் வாங்கிச் செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் புவிசார் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
கரிசல் மண் பூமியான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விளைவிக்கப்படும் நிலக்கடலைகளுக்கு தனி மவுசு உண்டு. இயற்கையில் இனிப்பு சுவை கொண்ட இந்த நிலக்கடலையை கொண்டு தயாரிக்கப்படும் கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு உலகம் முழுவதிலும் வரவேற்பு உண்டு
கரிசல் மண்ணில் விளையும் நிலக்கடலை, மண்ணின் தன்மையுடன் தாமிரபரணி தண்ணீர், பனைவெல்லம் ஆகியவற்றுடன் தயாரிக்கும் கோவில்பட்டி கடலை மிட்டாய் சுவையாக இருப்பது மட்டுமின்றி மருத்துவக் குணம் கொண்டவையாகவும் சத்துணவு தின்பண்டமாகவும் விளங்கி வருகிறது. 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கடலை மிட்டாய் உற்பத்தி செய்து வருகின்றன. இதனை நம்பி 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர்.
இங்கு தயாரிக்கப்படும் கடலைமிட்டாய் தமிழகம் முழுவதும் மட்டுமின்றி இந்தியா முழுவதும் மட்டுமின்றி, பல உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு சிறப்பு வாய்ந்த கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு கடந்த 2020ம் ஆண்டு மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத்துறையின் சார்பில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.
இது கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளர்களுக்கு புது உத்வேகத்தினை ஏற்படுத்தியது மட்டுமின்றி, கடலை மிட்டாய் தொழில் வளர்ச்சிக்கும் உதவி உள்ளது. அதுமட்டுமல்லாது தபால் துறை மூலமாக கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு சிறப்பு அஞ்சல் உறை வெளியிட்டது மட்டுமின்றி, மத்திய, மாநில அரசுகள் இணைந்து கடலை மிட்டாயை சர்வதேச தரத்திற்கு பேக்ஜிக் செய்வது தொடர்பான பயிற்சியும் அளிக்கப்பட்டது.
மத்திய, மாநில அரசுகளில் தொடர் ஊக்கத்தினை தொடர்ந்து கோவில்பட்டி கடலை மிட்டாய் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் புவிசார் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாயின் பெருமையை உலகளவில் கொண்டு செல்ல இந்திய அஞ்சல் துறை கடந்த அக்டோபர் மாதம் சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டது. தற்போது கோவில்பட்டி கடலை மிட்டாய் விற்பனையும் அஞ்சல் துறை மூலம் அனைத்து அஞ்சலகங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது கோவில்பட்டி ரயில் நிலையத்தில் கடலை மிட்டாய் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.