அவ்வளவு வன்மம்.. பஸ்ஸுக்குள்ளேயே வெட்டப்பட்ட தேவேந்திரன்! துண்டான விரல்களை ஒட்ட வைத்த மருத்துவர்கள்!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே அரசு பேருந்தில் சென்ற மாணவனை மூன்று பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் நெல்லை அரசு மருத்துவமனையில் மாணவன் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், துண்டான மாணவனின் விரல்கள் ஒட்டவைக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அரசு பள்ளிகளில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை என புலம்புகின்றனர் பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும். அந்த அளவுக்கு பள்ளிக் கல்வித் துறை சீரழிந்து கிடப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.

மேலும், பள்ளிகளில் சாதிய ரீதியான மோதல்கள் அதிகரித்து வருவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை போன்ற மாவட்டங்களில் மாணவர்கள் இரு குழுக்களாக பிரிந்து தாக்கிக் கொள்ளும் சம்பவங்களும் நடைபெற்று வருவது பெற்றோர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
அப்படி ஒரு கொடூர சம்பவம் தான் இன்று நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே அரசு பேருந்தில் பயணம் செய்த 11 ஆம் வகுப்பு மாணவன் பள்ளி செல்லும் வழியிலேயே பேருந்தில் வைத்து வெட்டப்பட்டு இருக்கிறார். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே அரியநாயகிபுரத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரன். 17 வயதான அவர் தனியார் உதவி பெறும் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை வழக்கம் போல பள்ளிக்கு செல்வதற்காக அரியநாயகிபுரம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து பேருந்தில் ஏறி ஸ்ரீவைகுண்டம் சென்றுள்ளார்.

அப்போது மாணவன் தேவேந்திரனை பின் தொடர்ந்த கும்பல் பேருந்தை ஓரிடத்தில் வழிமறித்து தடுத்துள்ளது. தொடர்ந்து பேருந்தை நிறுத்தி அதற்குள் சென்ற அந்த கும்பல் மாணவன் தேவேந்திரனை வெட்ட முயன்றனர். தொடர்ந்து மாணவனை வெளியே இழுத்து ஆய்வாளர் சரமாரியாக தாக்கினார். உயிரை காப்பாற்றிக் கொள்ள அங்கிருந்து தேவேந்திரன் தப்பி ஓட முயன்றுள்ளார். இருந்தும் அந்த கும்பல் விடாமல் ஓட ஓட அரிவாளால் விரட்டி வெட்டியது. இதில் தலை கைகால் என பல்வேறு இடங்களில் மாணவனுக்கு வெட்டுக்காயம் விழுந்தது.
இந்த சம்பவத்தை கண்டு சக பயணிகள் அதிர்ச்சி அடைந்ததோடு, ஸ்ரீவைகுண்டம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு வந்த போலீசார் படுகாயம் அடைந்த மாணவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலையில் பலத்த காயம் ஏற்பட்டதோடு விரல்களும் துண்டானதால் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கபடி விளையாட்டு போட்டியில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் மாணவன் வெட்டப்பட்ட தகவலை கேட்டு அங்கு வந்த மாணவனின் பெற்றோர்களும் உறவினர்களும் மருத்துவமனை வளாகத்தில் அழுது புரண்டனர். இதற்கிடையே தனிப்படை அமைத்த போலீசார் மூன்று சிறுவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இன்று மாணவன் தேர்வு எழுத இருந்த நிலையில் அவனது விரல்களும் வெட்டப்பட்டது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நெல்லை மருத்துவமனையில் மாணவனின் விரல்களை ஒட்ட வைக்கும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு மாணவனின் நான்கு விரல்கள் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் ஒட்ட வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இன்னும் அறுவை சிகிச்சை நடைபெற்று வரும் நிலையில் மாணவனின் துண்டான அனைத்து விரல்களும் ஒட்டவைக்கப்படும். விரைவில் வழக்கம் போல மாணவன் தனது விரல்களை பயன்படுத்தி பிற வேலைகளை செய்யலாம் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications