விஜய் கட்சி தவெகவில் இணைந்த தூத்துக்குடி ஸ்னோலின் தாய்.. எங்களுக்காக அரசியலுக்கு வந்தார் என உருக்கம்
தூத்துக்குடி: விஜய்யின் தமிழக வெற்றிக் கழத்தில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ஸ்னோலின் தாய் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார். விஜய் தங்களுக்காக வந்து நின்றதாகவும், எனவேதான் அவரது கட்சியில் இணைகிறேன் எனவும் அவர் பேட்டியளித்துள்ளார்.
தமிழக அரசியலில் சமீப காலமாக எதிர்க்கட்சிகளின் பங்களிப்பு பெரிய அளவுக்கு இல்லை என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும், பெயருக்கு கூட அந்த அரசியலை பல விஷயங்களில் கட்சி செய்யவில்லை என்றும், பாஜக சர்ச்சை அரசியலை மட்டுமே செய்து வருகிறது எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறி வந்தனர். இப்படி இருக்கையில், நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் தனது அரசியல் கட்சியை அறிவித்தார். இந்த அறிவிப்பு தமிழக அரசியலில் பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியிருந்தது.

அறிவிப்பை தொடர்ந்து, கடந்த மாதம் விக்கிரவாண்டியில் அவர் நடத்திய முதல் அரசியல் மாநாடு, தமிழக வெற்றிக் கழத்தின் கொள்கைகள் என்ன? அரசியல் வழிக்காட்டி யார்? எதிரிகள் யார்? என்பது குறித்து தெளிவுப்படுத்தியிருந்தார். மாநாட்டில் திராவிட கழகத்தை விமர்சித்திருந்த அவர், திமுக தங்களது அரசியல் எதிரி என்றும், பாஜக கொள்கை எதிரி என்றும் விளக்கியிருந்தார். அவரது கருத்துக்களுக்கும், கொள்கைகளுக்கும் பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்பும், ஆதரவும் வந்தது.
மாநாட்டை தொடர்ந்து கட்சியின் செயற்குழு கூட்டத்தை கூட்டி சில தீர்மானங்களையும் அவர் நிறைவேற்றியிருந்தார். இது தமிழக அரசியலில் பேசு பொருளானது. இதனயடுத்து தற்போது கட்சியை பலப்படும் பணிகளை மேற்கொண்டிருக்கிறார். புதிய உறுப்பினர்களையும், மாற்றுக்கட்சியிலிருந்து வரும் நிர்வாகிகளையும் கட்சியில் இணைக்க மாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி பல்வேறு மாவட்டங்களிலும் புதிய நிர்வாகிகளை இணைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

தூத்துக்குடியில் இன்று நடந்த இந்த நிகழ்வில் ஸ்னோலின் தாய் உட்பட 200க்கும் அதிகமானோர் தவெகாவில் இணைந்துள்ளனர். கடந்த 2018ம் ஆண்டு தூத்துக்குடியில் நடைபெற்ற தூப்பாக்கிச்சூட்டில் ஸ்னோலின் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு நியாயம் கேட்டு பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் குதித்தனர். அப்போது நள்ளிரவு என்றும் பாராமல் பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருந்தார். ரிஜினி போன்ற முக்கிய நடிகர்கள் தூத்துக்குடி போராட்டத்திற்கு எதிராக பேசியிருந்த நிலையில், விஜய் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்தித்திருந்தது பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில் இன்று ஸ்னோலின் தாய் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கிறார். தனக்கும், தனது மகள் ஸ்னோலினுக்கும் விஜய் அவ்வளவு பிடிக்கும் என்றும், ஸ்னோலின் மறைவின் போது விஜய் வந்து ஆறுதல் தெரிவித்திருந்தார் என்பதாலும் இக்கட்சியில் இணைவதாக தாய் தனியார் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications