மக்கள் திரண்டு வந்து அடிப்பாங்க.. புலம்பிய ‘திமுக’ கவுன்சிலர்.. ஆடியோ வெளியானதால் பரபரப்பு!
திருச்செந்தூர் : திருச்செந்தூர் நகராட்சியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவது பற்றி, திமுக கவுன்சிலர் ஒருவர் புலம்பிய ஆடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நம்மை பொதுமக்கள் அடித்து விரட்டக்கூடிய நிலைமை வரப்போகிறது என்று திமுக கவுன்சிலர் ரூபன் அந்த ஆடியோவில் வேதனையுடன் பேசியுள்ளார்.
கடந்த சில நாட்களாக நிலவி வரும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் திருச்செந்தூர் நகராட்சி பகுதி மக்கள் கடும் கோபத்தில் இருப்பதாகவும், இனி காரணம் சொன்னால் நகராட்சிக்கே வந்து நம்மை அடிப்பார்கள் என்றும் அந்த ஆடியோவில் அவர் புலம்பியுள்ளார்.
இந்து முன்னணி கொடியுடன் திமுக நிர்வாகி.. 'காவித்துண்டு’ ஷாக் ஆன தொண்டர்கள்- தலைமைக்கு பறந்த 'போட்டோ’
திருச்செந்தூர் நகராட்சி
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், கடந்த 2021ஆம் ஆண்டு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 27 வார்டுகள் உள்ள இந்த திருச்செந்தூர் நகராட்சியின் தலைவராக திமுகவைச் சேர்ந்த சிவஆனந்தி உள்ளார். கடந்த சில மாதங்களாகவே திருச்செந்தூர் நகராட்சி பகுதியில் கடும் குடுநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
ஆளுங்கட்சி கவுன்சிலர்
இந்நிலையில் திருச்செந்தூர் நகராட்சி முழுவதும் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக 3-வது வார்டு திமுக கவுன்சிலர் ரூபன் புலம்பிய வாட்ஸ்அப் ஆடியோ, லீக் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடிநீர் தட்டுப்பாடு பற்றி ஆளுங்கட்சி கவுன்சிலர் பேசிய அந்த ஆடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பரபரப்பு ஆடியோ
அந்த ஆடியோவில், திருச்செந்தூர் நகராட்சியில் குடிதண்ணீர் தட்டுபாடாக இருக்கிறது. இது நிர்வாக சீர்கேடா, இல்ல கடவுளின் சோதனையா, நாங்கள் ஜெயித்த தரித்திரமா? எப்படி இப்படி குடிநீர் தட்டுப் பாடு உண்டானது? அனைத்து பொதுமக்களும் குடிதண்ணீர் கிடைக்கவில்லை என திட்ட ஆரம்ப்பித்து விட்டார்கள். நம்மால் குடிநீர் கொடுக்க முடியவில்லை என திமுக கவுன்சிலர் ரூபன் விரக்தியோடு பேசுகிறார்.
மக்கள் அடித்து விரட்டுவார்கள்
மேலும், நகராட்சி நிர்வாகம் குடிநீருக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. புது நகராட்சி, புது கட்டிடம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். தண்ணீர் தான் முக்கியம். இல்லையென்றால் ஒரு நாள் நம் அனைவரையும் பொதுமக்கள் அடித்து விரட்டக் கூடிய நிலைமை வரும். இனியும் மோட்டார் பழுதாகிவிட்டது, பைப் உடைந்துவிட்டது என காரணம் சொன்னால் நகராட்சிக்கே வந்து நம்மை அடிப்பார்கள் என அந்த ஆடியோவில் புலம்பியுள்ளார்.
திமுக கவுன்சிலர்
தற்போது இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது. திருச்செந்தூர் திமுக நகராட்சி கவுன்சிலர், குடிநீர் தட்டுப்பாடு குறித்துப் புலம்பியுள்ள இந்த ஆடியோவால், திமுகவிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, லோக்கல் அமைச்சருக்கும் தகவல் சென்றிருப்பதால், நகராட்சியில் அதிரடி ஆக்ஷன் இருக்கும் என்கிறார்கள்.