தூத்துக்குடி ஆட்சியர் கட்டுப்பாட்டில் வந்தது சாத்தான்குளம் காவல்நிலையம்- பொறுப்பு அதிகாரிகள் நியமனம்
தூத்துக்குடி: சர்ச்சைக்குரிய சாத்தான்குளம் காவல்நிலையமானது சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையின் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. சாத்தான்குளம் காவல்நிலைய பொறுப்பு அதிகாரிகளாக வருவாய்த்துறை அதிகாரிகள் செந்தூர் ராஜன், சுவாமிநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வர்த்தகர்கள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் சாத்தான்குளம் போலீஸ் தாக்கியதால் உயிரிழந்தனர். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
ஒத்துழைப்பு தராத போலீசார்
இந்த விசாரணையின் போது சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட் பாரதிதாசனை விசாரணை நடத்தவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதனடிப்படையில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை நடத்தினார். ஆனால் அவரது விசாரணைக்கு சாத்தான்குளம் போலீசார் ஒத்துழைப்பு தர மறுத்துவிட்டனர்.
மாஜிஸ்திரேட் மீது பாய்ச்சல்
மேலும் மாஜிஸ்திரேட் பாரதிதாசனை ஒருமையிலும் மகாராஜன் என்ற போலீஸ் கான்ஸ்டபிள் விமர்சித்திருந்தார். இதனை அப்படியே இ மெயில் மூலம் புகாராக மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு மாஜிஸ்திரேட் பாரதிதாசன் அனுப்பி வைத்தார். இதனிடையே போலீஸ்காரர் மகாராஜனை தமிழக அரசு சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி
இதனை ஏற்று போலீசார் மீது மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்தது. மேலும் சாத்தான்குளம் காவல்நிலையத்தை தூத்துக்குடி ஆட்சியர் தமது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் சாத்தான்குளம் காவல்நிலையத்துக்கு பொறுப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பொறுப்பு அதிகாரிகள் நியமனம்
இதனடிப்படையில் வட்டாட்சியர் செந்தூர் ராஜன், துணை வட்டாட்சியர் சுவாமிநாதன் ஆகியோர் சாத்தான்குளம் காவல்நிலைய பொறுப்பாளர்களாக நியமித்து தூத்துக்குடி ஆட்சியர் உத்தரவிட்டார். இந்த இரு அதிகாரிகளும் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் உள்ள ஆவணங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபடுவர். பின்னர் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் பேரில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வர்.