கனிமொழி எம்பி வீட்டில் இரவில் புகுந்த மர்மநபர்..தூத்துக்குடியில் துப்பாக்கியுடன் போலீஸ் பாதுகாப்பு
தூத்துக்குடி: திமுக எம்பி கனிமொழியின் தூத்துக்குடி வீட்டுக்குள் நேற்று இரவு மர்மநபர் நுழைந்த நிலையில் அதுபற்றிய புகாரில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
மறைந்த தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் மகளும், தற்போதைய முதலமைச்சர் முக ஸ்டாலின் தங்கை கனிமொழி. இவர் திமுகவில் துணை பொதுச்செயலாளராக செயல்பட்டு வருகிறார்.
முன்னதாக கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன்மூலம் தூத்துக்குடி எம்பியாக செயல்பட்டு வருகிறார்.
அடுத்த பிறந்த நாளில் அமைச்சர்! நாளைய திமுக தலைவர் 'உதயநிதி ஸ்டாலின்’!ஆரூடம் சொல்லும் அன்பில் மகேஷ்
தூத்துக்குடியில் வீடு
இவர் சென்னையில் வசித்து வந்தார். தூத்துக்குடி எம்பியாக மாறிய நிலையில் தூத்துக்குடியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வருகிறார். தூத்துக்குடி குறிஞ்சி நகரில் கனிமொழி எம்பியின் வீடு உள்ளது. நாடாளுமன்ற கூட்டம் இல்லாத நிலையில் மாதம் 20 நாட்களுக்கு மேலாக தூத்துக்குடியிலேயே கனிமொழி எம்பி தங்கி வருகிறார். மேலும் திமுகவை தென்மாவட்டங்களில் பலப்படுத்தும் வகையில் கனிமொழி செயல்பட்டு வருகிறார்.
தூத்துக்குடியில் கனிமொழி
இந்நிலையில் தான் தூத்துக்குடியில் கடந்த 22ம் தேதி புத்தக கண்காட்சி துவங்கியது. இந்த புத்தக கண்காட்சி வரும் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியை துவக்கி வைத்த கனிமொழி தினமும் அதில் பங்கேற்று வருகிறார். இதனால் அவர் தற்போது தூத்துக்குடியில் உள்ள வீட்டில் தங்கி உள்ளார்.
வீட்டுக்குள் நுழைந்த கனிமொழி
இந்நிலையில் தான் நேற்று இரவு கனிமொழி எம்பியின் வீட்டுக்குள் மர்மநபர் ஒருவர் நுழைந்ததாக கூறப்படுகிறது. இந்த வேளையில் கனிமொழி வீட்டில் இருந்தாரா? என்பது பற்றிய விபரம் வெளியாகவில்லை. இதுதொடர்பாக கனிமொழி எம்பி தரப்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் விசாரணையை துவங்கினர்.
துப்பாக்கி ஏந்தி போலீஸ் பாதுகாப்பு
இந்த விசாரணையின் ஒருபகுதியாக சந்தேகத்தின் பேரில் தூத்துக்குடியை சேர்ந்த ஒருநபரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே பாதுகாப்பு கருதி கனிமொழி எம்பியின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர் கனிமொழி எம்பியின் வீட்டுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.