எல்லா பிரச்சாரத்திலும் "அம்மா.." ஈஸியா ரீச்சாகும் யுக்தி.. உதயநிதி ஸ்டாலின் பிரச்சார ஸ்டைல் இதுதான்
திருச்செந்தூர்: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தில் தினம்தினம் மெருகேறி கொண்டே செல்கிறது.
எளிய, பாமர மக்களும் அரசியலில் என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளும் வகையில் எளிமையான சொற்களை பயன்படுத்தி ஈசியாக விளக்கிவிட்டு செல்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
அதிலும் அவர் குறி வைக்கக்கூடிய வாக்கு பெண்களின் ஓட்டுவங்கி தான் என்பதை பிரச்சார பேச்சை உன்னிப்பாக கவனித்தால் புரிந்து கொள்ள முடிகிறது.
அம்மா, அம்மா
ஒவ்வொரு முக்கியமான விஷயத்தை அவர் தனது தேர்தல் பிரச்சாரத்தில் பேசும்போதும், அம்மா, அம்மா என்று பெண்களை நோக்கி தான் அந்த சொற்றொடரை முடித்து வைக்கிறார். ஆண்களை விடவும் பெண்கள் வாக்குகளை திமுக பக்கம் கொண்டு வந்து விட வேண்டும் என்பதில் உதயநிதி ஸ்டாலின் ரொம்பவே முயற்சி செய்கிறார் என்பதை அவரது பிரச்சாரத்தை உன்னிப்பாக கவனிக்கும் யாராக இருந்தாலும் புரிந்து கொள்ள முடிகிறது.
அனிதாவுக்கு ஆதரவு
இன்று தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி நகர பகுதியில் திறந்த வேனில் நின்றபடி பிரச்சாரம் செய்தார் உதயநிதி ஸ்டாலின். இது, திருச்செந்தூர் சட்டசபைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியாகும். எனவே திமுக சார்பில் போட்டியிடும் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக உதயநிதி பிரச்சாரம் மேற்கொண்டார். அனிதா ராதாகிருஷ்ணனுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பெண்கள் வாக்குகள்
இந்த பிரச்சாரத்தின் போதும் பெண்கள் மத்தியில் எந்த விஷயம் எடுபடுமா அதை கையில் எடுத்தார் உதயநிதி. "நாம் எல்லாம் மறந்து விட்டோம் என்று நினைக்கிறாங்க"ம்மா.." ஜெயலலிதா அம்மையார் எப்படி இறந்து போனார் என்று உங்களில் யாருக்காவது தெரியுமா" என்று அவர் ஆரம்பிக்கும்போது பெண்கள் தரப்பில் இருந்தும் கரகோஷம் எதிரொலிக்க தொடங்குகிறது.
சிசிடிவி
இந்தியாவிலேயே அதிநவீன வசதி கொண்ட ஒரு ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார் . ஆனால் அங்கு சிசிடிவி வேலை செய்யவில்லை என்று சொல்லிவிட்டார்கள்ம்மா.. ஜெயலலிதாவின் உறவினர்கள் தீபா, தீபக் என்று யாரையுமே ஆஸ்பத்திரிக்குள் விடாமல் விரட்டி விட்டார்கள்ம்மா. என்று சென்டிமென்ட் விஷயத்தைக் கையிலெடுத்தார் உதயநிதி.
உழைப்பு
அதுமட்டுமல்ல ஜெயலலிதா எப்படி மறைந்தார் என்பதை திமுக ஆட்சிக்கு வந்ததும் கண்டறிவோம், அதிமுகவினருக்கும் சேர்த்து நாங்கள்தான் உழைத்துக் கொண்டிருக்கிறோம் என்று சொல்ல கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.
எய்ம்ஸ் விவகாரம்
மதுரை அருகே எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக மத்திய அரசு அடிக்கல் நாட்டியதோடு சரி. பிறகு அது கட்டும் பணிகள் நடைபெறவில்லை என்பதை மக்கள் மத்தியில் எடுத்துரைக்கும் வகையில் ஒரு செங்கல் ஒன்றை கையில் எடுத்துக் கொண்டு பிரச்சாரம் செய்கிறார் உதயநிதி. இந்த செங்கல் மட்டும்தான் எய்ம்ஸ் மருத்துவமனை என்ற பெயரில் வைக்கப்பட்டது அதை நான் தூக்கிக்கொண்டு வந்து விட்டேன் பாருங்கள் என்று சிம்பிளாக புரியும்படி பிரச்சாரம் செய்கிறார். இதேபோலத்தான் மகளிர் வாக்குகளை குறிவைத்து ஒவ்வொரு வார்த்தைக்கும் முடிவில் அம்மா அம்மா என்று சொல்லி நான் உங்கள் வீட்டுப் பிள்ளையாக வந்திருக்கிறேன், கலைஞரின் பேரன் வந்து இருக்கிறேன் என்றெல்லாம் அவர்கள் மத்தியில் உரை நிகழ்த்துகிறார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைப்பதை பார்க்க முடிகிறது.